திண்டுக்கல்லில் களைகட்டியது முப்பெரும் விழா.. மாட்டுவண்டிகளில் படையெடுத்த திமுகவினர்
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக மாட்டு வண்டிகளில் படையெடுத்துள்ளனர் திமுகவினர்.
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக மாட்டு வண்டிகளை பூட்டிக் கொண்டு திமுகவினர் விழா நடைபெறும் இடத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலை அருகே உள்ள அண்ணா திடலில் முப்பெரும் விழா பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் விழா நடைபெறும் அரங்கத்தின் முகப்பு பகுதி மிகவும் நன்றாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விழா அரங்கம்
திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா திண்டுக்கல் என்று எழுதப்பட்டிருக்கும் விழா அரங்கில் கலைஞர், அண்ணா, பெரியார் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. பின்னர் மற்றொரு இடத்தில் கழக உடன்பிறப்புகளே வருக வருக என்று எழுதப்பட்டிருந்தது.
கலைஞர் கட்அவுட்
விழா அரங்கில் கலைஞர் கருணாநிதிக்கு மிகவும் பிரம்மாண்டமான கட்அவுட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்ள கழகத்தினர் வந்து கொண்டே உள்ளனர்.
திமுகவினர் வருகை
இந்த முப்பெரும் விழா பொதுக் கூட்டத்துக்கு திமுகவினர் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அவரவர் இருக்கும் தூரத்துக்கு ஏற்ப வந்தவண்ணம் உள்ளனர்.
மாட்டு வண்டிகளில்...
ஒரு சில திமுகவினர் மாட்டு வண்டிகளை பூட்டிக் கொண்டு விழா நடைபெறும் இடத்துக்கு வந்தது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்ப்பதற்காக வந்தது போல் இருந்தது.