ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு! ஹைகோர்ட் தலைமை நீதிபதி பெஞ்ச் விசாரணை
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவையொட்டி சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.
அதிமுக (அம்மா) அணி வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துைற சோதனை நடத்தியது.
இதில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பல கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்ய அமைச்சர்கள் பலர் பணம் வழங்கி உள்ள தகவல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

டிசம்பருக்குள் தேர்தல்
இதுபற்றிய விசாரணையை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலை ஏப்ரல் 10ம் தேதி திடீரென ரத்து செய்தது. இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி கடந்த 12ம் தேதி டெல்லியில் பேட்டி அளித்தபோது, ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவித்தார்.

தேர்தல் ஆணையருக்கு கோரிக்கை
இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இடைத்தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் ஆர்கே நகரில் போட்டியிட்ட மருதுகணேஷ் தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளார். அதில் கூறுகையில், வருமானவரித்துறை அறிக்கையில் உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப்பட்டுவாடா புகாரில் சிக்கியுள்ள அனைவர் மீதும் வழக்கு பதிய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் தாமதம்
இதேபோல ஹைகோர்ட்டில் மருதுகணேஷ் தாக்கல் செய்த மனுவில், வருமான வரி புகாரில் வழக்கு பதிவு செய்யும் வரை தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்த ஹைகோர்ட், இது தேர்தல் தொடர்பான வழக்கு என்பதால் தலைமை நீதிபதி பெஞ்ச் விசாரிக்கும் என அறிவித்தது.

விசாரணை முடியும்வரை தேர்தல் இல்லை?
மேலும், விசாரணை முடியும்வரை ஆர்.கே.நகருக்கு தேர்தல் நடத்த உத்தரவு வெளியாகாது என்று நம்புவதாகவும் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் மேலும் தாமதம் ஆக வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications