"அம்மா: படத்தை எடுக்கச் சொல்வதா.. கரூர் திமுக கவுன்சிலர்களை மைக்கால் அடித்த அதிமுகவினர்!
கரூர்: நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை எடுக்க சொன்னதால் தி.மு.க கவுன்சிலர்களுக்கு மைக் அடி விழுந்தது கரூர் நகராட்சிக் கூட்டத்தில்.
கரூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற கூட்டரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஜெயலலிதா புகைப்படம் தொடர்பாக மோதல் வெடித்தது.
குற்றவாளி ஜெயலலிதா
நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சித் தலைவர் தீர்மானங்களை வாசிக்க முற்பட்டபோது, 30 வது வார்டு தி.மு.க கவுன்சிலர் நாராயணன் எழுந்து, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்று கூறினார்.
மைக்கை வீசியடித்த தானேஷ்
இதையடுத்து கோபமடைந்த 33 வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் தானேஷ் எ முத்துக்குமார் தனக்கு முன்பிருந்த மைக்கை எடுத்து எதிர்வரிசையில் இருந்த தி.மு.க கவுன்சிலர்கள் மீது வீசித் தாக்கினார். அப்போது மற்ற அ.தி.மு.க கவுன்சிலர்களும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் வசை பாடினார்கள்.
வெளிநடப்பு
இதை தொடர்ந்து கூட்டமன்றத்தில் இருந்து தி.மு.க கவுன்சிலர்களும், காங்கிரஸ் கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
ஒரே நொடியில் 78 தீர்மானங்களும் நிறைவேற்றம்
இதனை தொடர்ந்து கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 78 தீர்மானங்களும் ஒரே நொடியில் ஒரே வார்த்தையில் நிறைவேற்றப்பட்டதாக நகர்மன்ற தலைவர் செல்வராஜ் அறிவித்தார்.
தள்ளிப் போடப்பட்ட கூட்டம்
இது குறித்து பின்னர் தி.மு.க கவுன்சிலர் எம்.நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரூர் நகராட்சியின் கூட்டம் கடந்த மாதம் நடக்க வேண்டியதை பின்னர் தள்ளி போட்டனர். பின்னர் இன்று காலை கரூர் நகராட்சியின் கூட்டம் நடந்தது.
மைக்கால் அடிப்பதா
நீதிமன்றத்தால் குற்றவாளி என நிருபிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் கரூர் நகர்மன்ற கூட்டரங்கில் இருக்கிறது. நகர்மன்ற தலைவரிடம் படத்தை எடுக்க கூறியதற்கு அ.தி.மு.க கவுன்சிலர் மைக்கால் தாக்கினார்.
கருணாநிதி போட்டோவை வைக்கச் சொல்வோம்
சபையின் மரபை மீறி இந்த செயல் நடந்துள்ளது. கரூர் நகர்மன்ற கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோ இருக்கிறது. அதனால் முன்னாள் முதல்வர் எங்கள் தலைவர் கருணாநிதியின் போட்டோவை நாங்கள் வைக்க கூறுவோம் என்றார்.
பரபரப்பு
கரூர் நகர்மன்ற கூட்டத்தில் திடிரென மைக்கால் கவுன்சிலர்கள் மீது நடைபெற்ற இந்த தாக்குதல் மற்ற கட்சியினர்களுக்கிடையே பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.