ஆர்.கே.நகர்: மதுசூதனனுக்கு கடைசி நேர பிரசாரத்தில் செக் வைக்கும் திமுகவின் 'பொளேர்' பிளான்
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனுக்கு செக் வைக்கும் வகையில் அதிரடி பிரசாரத்தை கடைசி சில நாட்களில் மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாம்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனுக்கு கடைசிநேரத்தில் செக் வைக்கும் வகையில் அதிரடி வியூகங்களை வகுத்துள்ளதாம் திமுக.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக மற்றும் ஓபிஎஸ் அதிமுக இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்கிறது உளவுத்துறை வட்டாரங்கள். இரு தரப்புக்கும் இடையே 3% அளவுக்குதான் வாக்கு வித்தியாசம் இருக்குமாம்.
திமுக- ஓபிஎஸ் அணி
அதே நேரத்தில் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனுக்கும் தினகரனுக்குமான வித்தியாசம் 12% இருக்கும் என்கிறது உளவுத்துறை. இதனால் தற்போது போட்டி என்பதே திமுக- ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் என்கிற நிலை உள்ளது.
அதிரடி வியூகம்
இதனால் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்த அதிரடி வியூகம் வகுத்துள்ளதாம் திமுக. அதாவது 1991-96 ஆம் ஆண்டு ஆர்கே நகரில் வெற்றி பெற்று அமைச்சரான மதுசூதனன் தமது பதவிகாலத்தில் ஆர்கேநகருக்கு செய்யாதது என்ன? என்கிற பட்டியலை தயாரித்துள்ளதாம் திமுக தரப்பு.
கொடுங்கையூர் குப்பை
அத்துடன் ஆர்கே நகரின் பெரும் துயரமாக இருக்கும் கொடுங்கையூர் குப்பை கிடங்கை கொண்டு வந்ததே மதுசூதனன்தான்... கொடுங்கையூரில் நிலம் கையகப்படுத்தியதும் மதுசூதனனே... அவரால் எந்த ஒரு பிரச்சனையுமே அமைச்சராக இருந்தபோதே தீர்க்க முடியாத போது இப்போது என்ன சாதித்துவிடுவார்? என்கிற துண்டு பிரசரத்தை தயாரித்துள்ளனராம் திமுகவினர்..
எதிர்கொள்ளுமா ஓபிஎஸ் அணி
கடைசி நாட்களில் அதிரடியாக மதுசூதனனுக்கு எதிராக இத்தகைய துண்டு பிரசுரங்களை தீவிரமாக விநியோகிப்பது என்பதுதான் திமுகவின் திட்டமாம். திமுகவின் அதிரடி வியூகத்தை மதுசூதனன் எப்படி எதிர்கொள்வார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.