கேரளாவில் இருந்து குமரி பிரிந்தது குறித்த பொன்.ராதா பேச்சுக்கு திமுக, மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்!!
கன்னியாகுமரி: கேரளா இந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்திருக்காது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதற்கு திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்திருக்காது' என்று பேசினார்.
இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கு விளக்கம் அளித்த பொன். ராதாகிருஷ்ணன், ஒரு விழா மூலம் இந்துக்களும், சிறுபான்மையினரும் ஒன்றாகியிருந்தால் 100 சதவீத ஒற்றுமை ஏற்பட்டிருக்கும். அப்படி ஒற்றுமை ஏற்பட்டிருந்தால் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்திருக்காது. மொழிவாரி மாநிலங்களும் உருவாகி இருக்காது.
பொன்னார் விளக்கம்
குமரி மாவட்டமும் மத ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ கேரளாவில் இருந்து பிரிந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றே பேசினேன் என விளக்கம் அளித்திருந்தார்.
தொடரும் எதிர்ப்பு
ஆனால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிரஷ்ணனின் கருத்துக்கு குமரி மாவட்ட தியாகிகள் சங்கம், காமராஜர் நற்பணி மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டனர்.
திமுக கண்டனம்
இந்த நிலையில் குமரி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜனும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைவரும் அண்ணன்- தம்பி உறவோடு பழகி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து மத ரீதியான பிரிவினை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. அது மட்டுமின்றி மொழி ரீதியாக தன்னுடைய உயிர் கூட போனாலும் பரவாயில்லை என்ற நோக்கத்தோடு, குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைய வேண்டும் என்று போராடிய பெரியவர்களின் எண்ணங்களை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது. அந்த தியாகிகளுக்கு மதிப்பு அளித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
ஹெலன் டேவிட்சன்
கன்னியாகுமரி தொகுதி முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதற்காக மார்ஷல் நேசமணி, நத்தானியேல், பொன்னப்ப நாடார் போன்ற தலைவர்களுடன் தமிழ்மொழி பேசும் மக்களும் இணைந்து போராடி சிறை சென்று அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்தி குமரி மாவட்டம் உருவாகி தமிழகத்துடன் இணைந்தது.
கொச்சைப்படுத்துவதா?
இதனை தமிழக அரசே மகிழ்ச்சியோடு கொண்டாடி வரும் வேளையில் மத்திய அமைச்சர் விடுதலைப் போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக பேசியிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்காக நடந்த போராட்டத்தில் 36 பேர் உயிர் தியாகம் செய்தனர். மொழிவாரி மாநிலங்கள் அமைவதை விரும்பாதவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கோவில்களுக்கு செல்வதை விரும்பாதவர்கள் சமஸ்கிருதம் தவிர இதர மொழிகளை மதிக்காதவர்கள் படிப்படியாக வரலாறை திருத்த துடிக்கின்றனர்.
குமரி மாவட்ட தியாகிகளை இழிவு படுத்திய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.