தேமுதிக இழுபறியால் திமுக தேர்தல் பணியில் பாதிப்பில்லை... சொல்கிறார் ஸ்டாலின்
சென்னை: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக விரைவில் குழு அமைக்கப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேமுதிகவினால் திமுகவின் தேர்தல் பணிகளில் தாமதம் ஏதுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிக உடன் கூட்டணி அமைக்க திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி ஆகிய கட்சிகள் விரும்புகின்றன. விஜயகாந்துக்கு நேரடியாகவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் கட்சிகளிடம் விஜயகாந்தும், அவருடைய கட்சி நிர்வாகிகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு உறுதியான முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் இரண்டு கட்சிகளுமே விஜயகாந்தின் முடிவை அறிய முடியாமல் கூட்டணி அமைக்க முடியாமல் தவிக்கின்றன. தேமுதிகவினரும் ஒருவித குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று சென்னை சென்னை அறிவாலயத்தில் நேர்காணலில் பங்கேற்க வந்தவர்களை சந்தித்த ஸ்டாலின், சில நிமிடங்கள் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தேர்தல் அறிவித்து விட்டதால் நடத்தை விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றார். இதனை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். முதல்வர் படங்கள் மறைப்பு போதாது அகற்றப்பட வேண்டும் என்றும் கூறினார் .
உள்துறை செயலர் அபூர்வ வர்மா , உளவுத்துறை ஜஜி சத்தியமூர்த்தி , முதல்வர் , அமைச்சர்கள் தொகுதியில் உள்ள டிஎஸ்பி மற்றும் கமிஷனர்களை இட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
திமுகவில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் 197 தொகுதிகளுக்கு 3, 227 பேரிடம் நேர்காணல் முடிந்துள்ளது . நேர்காணல் முழு அளவில் முடிந்த பின்னர் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
தேமுதிகவினால் திமுகவின் தேர்தல் பணியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொகுதி உடன்பாடு மற்றும் பிரசார குழு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.