காவிரி விவகாரத்தில் ஜெ. ஜெயித்ததாகவே இருக்கட்டும்: கருணாநிதி
சென்னை: காவிரி பிரிச்னை பொதுவானது. இதை யார் தீர்த்தால் என்ன. தி.மு.க, அ.தி.மு.க., இருவரும் சேர்ந்து கூட பிரச்னையை தீர்க்கலாம். இதில் ஜெயல்லிதா ஜெயித்ததாகவே இருக்கட்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நாட்டை ஆள்வதற்காக கூட்டணி அமைக்கவில்லை, தி.மு.க., தலைமையிலான ஐனநாயக முற்போக்கு கூட்டணியை யாராலும் உடைக்கவும் முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
சின்னத்திற்கு மகிழ்ச்சி
தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின்னங்கள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. சூரியன் இல்லை என்றாலும், ஒன்றிற்கு இரண்டாக வெளிச்சம் தரக்கூடிய மெழுகுவர்த்தி சின்னம் மனிதநேய மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது.தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி வழங்குவது மெழுகுவர்த்தி. அதேபோல், நமது வேட்பாளர் ஐதர்அலியும் உங்களுக்காக உழைப்பார்.
உறவை பிரிக்க முடியாது
தி.மு.க., இஸ்லாமியர்கள் இடையிலான நட்பு தேர்தலுக்காக ஏற்பட்டது என நினைக்கக்கூடாது. பாலில் கலந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ அதேபோல் தி.மு.க., இஸ்லாமியர் உறவை யாராலும் பிரிக்க முடியாது. இது கூடா நட்பு அல்ல, கூடும் நட்பு.இந்த கூட்டணியை உடைக்க ஜெயலலிதா முயற்சிக்கக் கூடும். ஆனால், தி.மு.க., வினரின் உறுதியையும், உடன்பாட்டையும் யாராலும் உடைக்க முடியாது.
கூட்டணியை பிரிக்க முயற்சி
தி.மு.க., தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது.'தனியாக சாதிப்பவன் நான்' என நான் மார்தட்டிக் கொள்ளவும் இல்லை, அரைகூவலிடவும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.
காவிரி பிரச்சினை
திருவாரூரில், நாகை தொகுதி தி.மு.க., வேட்பாளர் விஜயனை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: 'காவிரி பிரச்னையில் துரும்பைக்கூட கிள்ளிப்போட வில்லை' என தஞ்சை மண்ணில், என்னை பற்றி ஜெயலலிதா பேசியுள்ளார். துரும்பை கிள்ளிப்போட்டால் பிரச்னை தீர்ந்து விடுமா.
போட்டி போட வேண்டாம்
கர்நாடக அரசு பிடிவாத்தில் உள்ளது. நான் பிறந்த ஆண்டில் இருந்து இந்த பிரச்னை பேசப்படுகிறது. காவிரி பிரிச்னை பொதுவானது. இதை யார் தீர்த்தால் என்ன. தி.மு.க, அ.தி.மு.க., இருவரும் சேர்ந்து கூட பிரச்னையை தீர்க்கலாம். வீடு தீப்பற்றினால் அணைக்க தான் வேண்டும். யார் அணைப்பது என்ற போட்டி கூடாது.
ஜெயலலிதா ஜெயிக்கட்டும்
இதில், கருணாநிதி ஜெயிப்பதா அல்லது ஜெயலலிதா ஜெயிப்பதா என்ற போட்டி அவசியமில்லை. நீங்கள் ஜெயித்தாகவே இருக்கட்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தான் மட்டுமே தமிழர்களுக்காக கவலைப்படுவது போலவும், தமிழக மக்களைப் பற்றி எனக்கு கவலையில்லை என்பது போலவும் பேசிவருகிறார்.
இலங்கை பிரச்சினை
தமிழ் சமுதாயத்தை வாழ வைக்க வேண்டும் என, உருவான இயக்கம்தான் தி.மு.க 'இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வராதது ஏன்?' என, ஜெயலலிதா கேட்கிறார். 1956ம் ஆண்டில், இலங்கை தமிழர் விடுதலைக்காக போராடி, அவர்களுக்காக தீர்மானம் கொண்டு வந்தது இந்த கருணாநிதி தான்.
பொய் சொல்லவில்லை
தி.மு.க., பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை. பொய் பேசுபவர் யார் என மக்களுக்கு தெரியும். முதல்வர் பதவிக்கு மாத சம்பளம் ஒரு ரூபாய் வாங்கினார். மகிழ்ச்சி, பிறகு எப்படி வந்தது பல கோடி ரூபாய்.நாம் எப்படி பட்ட முதல்வரை பெற்றுள்ளோம் என்பதை தெரிந்து கொள்ள பெங்களுரு தனி கோர்ட்டில் நடந்து வரும் சொத்து குவிப்பு ஒன்றே போதும்.
ஜெ. ஏமாற்றுகிறார்
தமிழர்கள் ஏமாந்தவர்கள் அல்ல, ஆளும் கட்சி என்ற பெயரில் அம்மையார் ஏமாற்றுகிறார். இந்தியாவில் அமைய உள்ள அரசியல் அங்கமாக இருக்க விரும்புகிறேன் என்கிறார். ஆனால், தமிழர்களை பங்கம் செய்ய வேண்டாம் என, எச்சரிக்கிறேன். இந்த தேர்தலில் அ.தி.மு.க., விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.