சேரும் கையுமாக திடீர் ஆக்ஷனில் குதித்த திமுகவினர்: பரபரத்த தலைமை செயலகம்
சென்னை: தலைமை செயலகத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் திமுகவினர் 50 புதிய நாற்காலிகளை கொண்டு வந்து போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலில் 89 இடங்களில் வெற்றி பெற்ற திமுக சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
தலைமை செயலகத்தில் ஸ்டாலினுக்கு என ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரிய அறை
தலைமை செயலகத்தில் திமுகவினர் அனைவரும் அமரும் வகையில் பெரிய அறையை ஒதுக்க வேண்டும் என சட்டசபை தலைவர் தனபாலிடம் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை.
வசதி இல்லை
ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு அருகில் உள்ள அறையையும் தங்களுக்கு ஒதுக்குமாறு திமுகவினர் அதிமுக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கும் அரசு பதில் அளிக்கவில்லை.
நாற்காலிகள்
தலைமை செயலகத்தில் திமுகவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் 25 பேர் தான் அமர முடிகிறது. மேலும் அங்குள்ள நாற்காலிகளில் கைப்பிடி இல்லை. இதை பார்த்த திமுகவினர் சனிக்கிழமை 50 புதிய பிளாஸ்டிக் நாற்காலிகளை கொண்டு வந்த அந்த அறையில் போட்டனர்.
பரபரப்பு
திமுகவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் இருந்த பழைய நாற்காலிகளை எடுத்து வெளியே வைத்தனர். இதனால் தலைமை செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எங்களுக்கு ஒதுக்கிய அறையில் போதிய நாற்காலிகள் இல்லாததால் நாங்களே புதிய நாற்காலிகளை வாங்கி வந்து போட்டுள்ளோம். அப்படியும் இடப்பற்றாக்குறையால் 39 பேர் வெளியே நிற்க வேண்டியுள்ளது. எங்களுக்கு பெரிய அறையை சபாநாயகர் ஒதுக்க வேண்டும் என்கின்றனர் திமுக எம்.எல்.ஏ.க்கள்.