சத்துணவு திட்டம் குறித்து பேச அனுமதி மறுப்பு- திமுக எம்.எல்.ஏக்கள் வெளி நடப்பு
சென்னை: புதுக்கோட்டையில் சத்துணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்ட சபையிலிருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் 2016-2017ம் ஆண்டு பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மு.க.ஸ்டாலின் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கண் ஒளி சிகிச்சை திட்டத்தின் கீழ் கண் அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 5.5 லட்சம் நபர்களுக்கு தமிழகத்தில் கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
மேட்டூர் அரசு கண் மருத்துவமனையில் தற்காலிகமாக கண் அறுவை சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கண் பார்வை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.
அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து திமுக எம்.எல்.ஏக்கள் பேச முற்பட்டனர். இதற்கு சபாநாயகர் தனபால் எதிர்ப்பு தெரிவிக்கவே, திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டையில் 10 அரசுப் பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தை நிறுத்த அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆட்சியரின் இந்த உத்தரவு குறித்து சட்டசபையில் பேச முற்பட்ட போது சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை என்றார். மேலும் திமுக கொறடா சக்கரபாணி பேசியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டதாக ஸ்டாலின் கூறினார்.
சபாநாயகர் தனபாலின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.