பூமி பூஜையா? இது “மதசார்பற்ற” நாடு.. தருமபுர ஆதீனத்தை அழைத்து நிகழ்ச்சி - கொந்தளித்த திமுக எம்பி
மயிலாடுதுறை: இன்று புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுவிழாவுக்கான அழைப்பிதழில் பூமிப்பூஜை விழா என்று குறிப்பிடப்பட்டு இருந்ததற்கு திமுக எம்பி செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
மயிலாடுதுறை நகராட்சியில் மணக்குடி என்ற பகுதியில் இன்று காலை 6:30 மணியளவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதற்கான அழைப்பிதழில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜக்குமார், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொள்ள உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பூமி பூஜை விழா
அத்துடன் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பூமி பூஜை விழாவில் ஆசி வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டு, அழைப்பதழின் மேலேயே பூமிப்பூஜை விழா என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

திமுக எம்பி செந்தில்குமார்
இதுகுறித்து அவர் பதிவிட்டு உள்ளதாவது, "மயிலாடுதுறை நகராட்சி பார்வைக்கு.. இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடு என்று நமது அரசியல் அமைப்பு சட்டம் உள்ள காரணத்தினால் மயிலாடுதுறை இந்தியாவில் அமைந்துள்ள ஓர் நகராட்சி என்ற அடிப்படையில் அந்த நிகழ்ச்சிக்கு பெயர் அடிகல் நாட்டு விழா அல்லது பணிகள் துவங்கும் விழா Ground breaking ceremony." என்று பதிவிட்டு உள்ளார்.

ஏரி சீரமைப்பு பணி
இதற்கு முன்பாக தருமபுரியில் அரசு திட்டங்கள் ஒரு மதம் சார்ந்து தொடங்கி வைக்கப்படுவதற்கு செந்தில்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடந்த ஜூலை மாதம் ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. இந்த பணியை தொடங்கி வைப்பதற்காக நீர்வளத்துறை அதிகாரிகள் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

செந்தில்குமார் எதிர்ப்பு
இந்த விழாவில் பங்கேற்ற தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் இந்து முறைபடி பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளையும் கடுமையாக கண்டித்தார். இந்து புரோகிதர்கள் மட்டுமன்றி இஸ்லாமிய இமாம்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களையும் இதனை தொடங்கி வைக்க அழைக்க வேண்டும் எனக் கூறினார்.

வெளியான வீடியோ
இது திராவிட மாடல் அரசு என்றும், இதுபோன்ற பூமி பூஜை நிகழ்வுகளில் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்றும் கூறி பூஜையை நிறுத்திவிட்டு பணியை அவர் தொடங்கி வைத்தார். செந்தில்குமார் அதிகாரிகளை கண்டிக்கும் வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதரவும் எதிர்ப்பு
இதனை அடுத்து செந்தில்குமாரை ஆதரித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டனர். திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணி மற்றும் திமுக ஆதரவாளர்கள், திராவிட, இடதுசாரி சிந்தனையாளர்களும் சமூக வலைதளங்களில் செந்தில்குமாரை பாராட்டி வருகின்றனர். அதேநேரம் பாஜக பிரமுகர்கள், இந்துத்துவா அமைப்பினர்கள் செந்தில்குமாரை கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக எம்பி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்ற நிகழ்வின் அழைப்பிதழ் குறித்து திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில் விமர்சித்து இருப்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications