காவிரி.. பிரதமரை விரைவில் திமுக எம்.பிக்கள் சந்திப்பார்கள்: ஸ்டாலின் பேச்சு
சென்னை: தே.மு.தி.க. உள்பட பல்வேறு மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையும் விழா தஞ்சையிலிலுள்ள திலகர் திடலில் நேற்று மாலை நடந்தது.
விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். பின்னர் ஸ்டாலின் பேசுகையில், காவிரி, பாலாறு, சிறுவாணி, முல்லைப்பெரியாறு என எல்லா பிரச்சினைகளும் சூழ்ந்துள்ள நேரத்தில் அரசு செயல்பட வேண்டுமா? வேண்டாமா?
காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை ஆளும்கட்சி கூட்டினால் முதல் கட்சியாக தி.மு.க வர தயாராக இருக்கிறது. ஆனால் அந்த முயற்சியில் ஆளும்கட்சி ஈடுபடவில்லை. காவிரி பிரச்சினை தொடர்பாக ஓரிரு நாளில் பிரதமர் மோடியை தி.மு.க. எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர்.
இன்னும் 4, 5 நாட்களில் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து, அவர்களது கருத்தை கேட்டு தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்ப இருக்கிறோம். அதன்பின்னரும் ஆளும்கட்சி செயல்படவில்லை என்றால் அவர்கள் செய்யும் பணியை எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க. முழுமையாக செய்ய தயாராக இருக்கிறோம்.
உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க. வழக்கு தொடரவில்லை. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும். மின்னணு வாக்கு எந்திரம் மூலம் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தான் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. ரத்து செய்வதற்காக வழக்கு தொடர்ந்தோம் என்றால் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுவும் தாக்கல் எதற்காக செய்தோம்? தேர்தலை கண்டு தி.மு.க. அஞ்சியது கிடையாது. அதை சந்திக்க எந்தவிதத்திலும் தயாராக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.