முதல் பக்கம், கடைசிப் பக்கம், அரைப்பக்கம்... மண்ணெண்ண, வேப்பெண்ண, வெளக்கெண்ண!
சென்னை: திமுக சார்பில் நான்காவது நாளாக இன்றும் ஊடகங்களில் ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக வெள்ளத்தின் போது ஆளும் கட்சியின் செயல்பாடு குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக திமுக சார்பில் செய்தித்தாள்களில் என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா என்ற ஒரு பக்க விளம்பரம் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த விளம்பரம் வீடியோவாக சன் டிவி, கலைஞர் டிவியிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த விளம்பரங்களில் வித்தியாசமான முறையில் ஆளும் கட்சியை விமர்சித்து வருகிறது திமுக.
திமுகவின் இந்த நூதன பிரச்சாரத்திற்கு பதிலடி தரும் விதமாக அதிமுகவினரும், சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
இது சிங்கம் ஸ்டைல்...
கடந்த 23ம் தேதி வெளியான திமுக விளம்பரத்தில், ‘5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கர்ல பார்த்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவில பார்த்திருப்பீங்க... நேர்ல பார்த்திருக்கீங்களா?' என சிங்கம் பட டயலாக் ஸ்டைலில் கூறப்பட்டிருந்தது. கூடவே, ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா..' என்ற பன்ச்சையும் வைத்து திமுகவினர் பட்டையைக் கிளப்பியிருந்தனர்.
நாங்களும் கொடுப்போம்ல...
இதைக் கண்டு பொங்கியெழுந்த அதிமுகவினர் இதற்கு பதிலடி தரும் விதமாக, சிங்கம் பட டயலாக் ஸ்டைலிலேயே கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஆகியோரை வைத்து விதவிதமான விளம்பரங்களை தயாரித்து, அவற்றை சமூகவலைதளங்களில் பரப்பினர்.
வேலை மட்டும் இல்லை...
அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24ம் தேதியும் திமுக சார்பில் ஒரு விளம்பரம் வெளியானது. அதில், ‘மண் கொள்ளை, பால் கொள்ளை, மின்சாரக் கொள்ளை, ஆனா 86 லட்சம் பேருக்கு வேலையே இல்லை. நோக்கியா பாக்ச்கான் போன்ற் அநிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியதால் 75,000க்கும் அதிகமானோர் வேலையிழப்பு' எனக் கூறப்பட்டிருந்தது.
வாட்ஸ் அப்...
உடனே அதிமுகவினரும் திமுக ஆட்சியில் நடந்த கொள்ளைகளை பட்டியலிட்டு, இந்த விளம்பரத்திற்கு பதிலடி கொடுத்தனர். வாட்ஸ் அப்பில் ஆடியோ வடிவிலும் சில விளம்பரங்கள் பரவியது.
வரும் ஆனா வராது...
மூன்றாவது நாளாக நேற்று திமுக வெளியிட்டிருந்த விளம்பரத்தில், ‘வரும்ம்ம் ஆனா வராது... இருக்கும்ம்ம்ம் ஆனா இருக்காது. 110 விதியின் கீழ் சட்டசபையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் வெத்துவேட்டு. தேர்தல் வாக்குறுதியில் 80% நிறைவேற்றப்படவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெள்ளம்...
இந்நிலையில் இன்று தமிழக வெள்ளத்தை கருவாக வைத்து திமுக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘மண்ணெண்ண.. வேப்பெண்ண... வெளக்கெண்ண.. தமிழ்நாடு வெள்ளத்துல மூழ்கினா எனக்கென்ன! உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் உறங்கிப் போன அரசால் 347 பேர் உயிரிப்பு, 25,000 கோடி வெள்ள சேதம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடரும் பஞ்ச்...
வழக்கம்போலவே இந்த விளம்பரத்தின் கீழும், ‘என்னம்மா இப்ப்டி பண்றீங்களேம்மா' இடம்பெறத் தவறவில்லை.
தொடரும் விளம்பரம்...
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக வித்தியாசமான முறையில் இப்படி தொடர்ந்து விளம்பரங்கள் வெளியிட்டு வருகிறது.
கடைசிப் பக்கத்தில்...
முதல் நாளில் செய்தித்தாள்களின் முதல்பக்கத்தில் வெளியான இந்த விளம்பரம், அடுத்த இரண்டு நாட்கள் கடைசிப் பக்கத்தில் ஒரு பக்க விளம்பரமாக வெளியானது. ஆனால், இன்று விளம்பரத்தின் அளவு கடைசிப் பக்கத்தில் அரைப்பக்கமாக சுருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.