விவசாயிகளுக்கு ஆதரவாக 25ம் தேதி முழுஅடைப்பு போராட்டம்
சென்னை: தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக சார்பில் அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.
2 மணிநேரம் 45 நிமிடங்கள் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
வறட்சி மற்றும் காவிரி நீர் கிடைக்காத கொடுமையின் காரணமாக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 25ம் தேதி மாநிலம் தழுவிய ''முழு அடைப்பு போராட்டம்'' நடத்துவது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களையும், முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கான காரணங்களையும் மக்களுக்கு விளக்கிடும் வகையில், சென்னையில் 22ம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. விவசாயிகளின் நலன் கருதி மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு, தொழிற்சங்கங்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பேராதரவு தந்து விவசாயிகளின் துயர் துடைக்க துணை நிற்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.