கட்சி அலுவலகங்களில் களைகட்டிய விருப்பமனுக்கள் விற்பனை... திருவாரூரில் கருணாநிதி போட்டியிட மனு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் விற்பனை கட்சி அலுவலகங்களிலும் விறுவிறுவென விற்பனையாகி வருகின்றன. திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் போட்டியிட வேண்டும் என, அவரிடம் கையெழுத்து பெற்ற விருப்ப மனுவுடன், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள், 50 பேர் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மனு அளித்துள்ளனர். கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் சேப்பக்கம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவாலயம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்காக அதிமுக, திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக களத்தில் இறங்கியுள்ளன.
கடந்த 20ம் தேதி முதல் அதிமுகவில் விருப்ப மனுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்காக அண்ணா அறிவாலயத்தில் கடந்த 24ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
அதிமுகவில் குவியும் மனுக்கள்
துவக்க நாளில் இருந்தே விருப்ப மனு கொடுக்க வந்த கூட்டத்தால் அ.தி.மு.க., தலைமை அலுவலகம் களை கட்டியது. 'சீட்' கேட்டு மனு கொடுக்கும் ஒவ்வொருவரும் முதலில் ஜெயலலிதா போட்டியிட மனு கொடுத்த பின்னரே, தனக்கு பணம் கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் பத்தாம் நாளான நாளான நேற்றும் கட்சி அலுவலகம் நிரம்பிவழிந்தது. விண்ணப்பம் வாங்க கட்சி நிர்வாகிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
குவியும் கோடிகள்
விருப்ப மனுக்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தை தொட்டது; இதன்மூலம் கட்சிக்கு 16 கோடியே 50000 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. பிப்ரவரி 6ம் தேதி வரை விருப்ப மனுக்கள் விற்பனை உள்ளதால் விண்ணப்பங்கள் விற்பனை 20 ஆயிரத்தை தொடும் 22 கோடி ரூபாய் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயப்பேட்டை பகுதியே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
திமுகவில் விண்ணப்பங்கள்
அதேபோல தி.மு.க.,வில் விருப்ப மனு 24ம் தேதி முதல் வாங்கப்படுகிறது. ஆனால் நேற்று முன் தினம் வரை குறைவான விண்ணப்பங்கள் மட்டுமே கட்சியினரால் வாங்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. தி.மு.க.,வில், விருப்பமனுவின் விலை 25 ஆயிரம் ரூபாய் என்பதால் தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்பட்டது அதை பொய்யாக்கும் வகையில் நேற்று கூட்டம் குவிந்தது.
வெள்ளிக்கிழமையில் குவிந்த கூட்டம்
கும்மிடிப்பூண்டி வேணு, வேலூர் காந்தி என்று பரபரப்பான மாவட்ட முகங்கள் தொண்டர் படை பரிவாரங்களுடன் அறிவாலயத்தில் முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். இவர்கள் தவிர, சென்னை, வேலூர், திருவள்ளூர் மாவட்டத்தில் பிற பொறுப்பு நிர்வாகிகளும் அறிவாலய ஏரியாவில் திரளாக திரண்டிருந்தனர். மனுக்களை வாங்குவதற்கு, ஐந்து டேபிள்களை அறிவாலயத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் பந்தல் போட்டு, கு.க.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் வாங்கிக் கொண்டிருந்தனர்.
அமிர்தயோகத்தில் மனு
வெள்ளிக்கிழமை அமிர்தயோகம், சுபமுகூர்த்த தினம் மட்டுமல்ல, திருத்தணி முருகப் பெருமான் கிளிவாகன சேவை நாளும்... அதேபோல் கூரத்தாழ்வார் குருபூஜையும், திருப்பதி ஏழுமலையானுக்கு புனுகு காப்பு நாளும்... அதுவும் இந்த வாரம் வரம் தரும் வாரமும் கூட. அதனால்தான் இவ்வளவு கூட்டம் என்று கூறினர் திமுக உடன் பிறப்புகள்.
கருணாநிதி, ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் மனு அளித்தனர். கருணாநிதி, ஸ்டாலின் இருவரும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி வர்த்தக அணி சார்பில் மனு அளிக்கபட்டது. சென்னை துறைமுகம், அண்ணா நகர் உள்ளிட்ட பல தொகுதிகளில், கருணாநிதி போட்டியிட வேண்டும் என, அக்கட்சியினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருவாருரில் போட்டி
திருவாரூரிலேயே மீண்டும் போட்டியிட கருணாநிதி விருப்பப்படுவதாக தெரிகிறது. திருவாரூரில் கருணாநிதி போட்டியிட வேண்டும் என, அவரிடம் கையெழுத்து பெற்ற விருப்ப மனுவுடன், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள், 50 பேர், நேற்று அறிவாலயத்துக்கு வந்து, மனு அளித்துள்ளனர்.
ராகு காலத்திற்கு முன்பே
நேற்று சுப முகூர்த்த தினம். ராகு காலம், காலை, 10:30 மணிக்கு துவங்கும் என்பதால், முன்கூட்டியே, கருணாநிதியிடம் விருப்ப மனுவில், திருவாரூர் நிர்வாகிகள் கையெழுத்துப் பெற்றனர்.
காஞ்சிபுரம் தொகுதியில்
தாம்பரம், சோழிங்கநல்லுார் தொகுதிகளில் கருணாநிதி, ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் துணை செயலர் மல்லிகா மோகன் விருப்ப மனு தாக்கல் செய்தார். அதே போல, கம்பம் தொகுதியில் போட்டியிட, கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உட்பட, பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மயிலாப்பூரில் பூச்சி முருகன்
திரைப்பட நடிகர் பூச்சி முருகன் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். முன்னணித் தலைவர்களில் ஒருவரான சற்குண பாண்டியன் ராயபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளார்.
அண்ணாசாலையில் கூட்டம்
அறிவாலயத்தின் உள்ளே கட்சியினர் ஆயிரக்கணக்கில் இருக்க, அண்ணா சாலையோ, அதே அளவில் தி.மு.க. கொடிகள் கட்டியிருந்த கார்களால் திணறிக் கொண்டிருந்தது. தி.மு.க.வின் பொதுக் கூட்டங்களில் வந்து விடும் சுண்டல், வறுகடலை வியாபாரிகளும், கட்சிக்கொடி, புத்தகங்கள், பேட்ஜ் விற்பவர்களும் அறிவாலயத்தில் திரண்டிருந்தனர்.
அன்புமணிக்கு 124 மனுக்கள்
முதல்வர் வேட்பாளராக அன்புணி ராமதாஸை முன்னிறுத்தி களத்தில் இறங்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள், அந்தக் கட்சியின் தைலாபுரம் அலுவலகத்தில் உள்ள அரசியல் பயிலரங்க வளாகத்தில் 27-ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. முதல் நாள், 612 விருப்பமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அன்புமணி ராமதாஸ் தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று 124 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
தேமுதிக விற்பனை
தேமுதிகவில் பிப்ரவரி 5ம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதே இன்னமும் விஜயகாந்த் அறிவிக்கவில்லை. எனவே சட்டசபை தேர்தலில் போட்டியிட தேமுதிகவினர் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டுவார்கள் என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.