அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி கட்டுவோம்.. கோவையில் ஸ்டாலின் வாக்குறுதி!
கோவை: திமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைப்போம் என்று கோவையில் இன்று நடந்த மருத்துவக் கருத்தரங்கில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நமக்கு நாமே பயணத்தின் ஒரு பகுதியாக இன்று கோவையில் மருத்துவக் கருத்தரங்கை திமுக நடத்தியது. ஹோட்டல் லீ மெரீடியன் ஹோட்டலில் நடந்த இந்த கருத்தரங்கை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடக்க உரையும் நிகழ்த்தினார்.
கருத்தரங்கில் ஸ்டாலின் பேசிய உரையின் விவரம்:
4 மாதமாக
நமக்கு நாமே என்ற பெயரில், கடந்த 4 மாதங்களாக, 234 சட்டமன்ற தொகுதிகளில் எனது பயணத்தை மேற்கொண்டு வருவது உங்களுக்கெல்லாம் தெரிந்து இருக்கும். இந்த பயணத்தில், இதுவரை 31 மாவட்டங்களில், மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், 215 சட்டமன்ற தொகுதிகளில் எனது பயணத்தை முடித்துள்ளேன். இன்னும் மீதம் இருக்கக் கூடிய 19 தொகுதிகளிலும், பிப்ரவரி மாதத்துக்குள் எனது பயணத்தை முடிக்க உள்ளேன். இந்த பயணத்தில் இதுவரை நான் பயணித்துள்ள தூரம் 11 ஆயிரம் கிலோ மீட்டர். இதில் பொதுமக்களிடம் இருந்து நான் பெற்று இருக்கக்கூடிய மனுக்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி விட்டது. இந்த பயணத்தில் நான் பல இடங்களில் நடந்தும், சைக்கிள், பைக், ஆட்டோ, ஜீப், வேன் என பல வாகனங்களில் பயணம் செய்தேன். நான் ஈடுபட்ட பயணத்தின் காரணம் தமிழகத்தின் எல்லா தரப்பு மக்களையும் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதனை மேற்கொண்டேன்.
5 தலைப்புகளில் ஒன்று
இந்த பயணத்தை தொடங்கும் போது, இதற்கான நோக்கைத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பெயரை, தலைப்பை வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, எனக்கு தோன்றிய 5 தலைப்புகளை எடுத்து கொண்டு சென்று தலைவர் கலைஞர் அவர்களிடம் கொடுத்தேன். ஆனால் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்ட தலைவர் கலைஞர், நமக்கு நாமே என்ற இந்த தலைப்பை ஒரு துண்டு சீட்டில் எழுதி என்னிடம் கொடுத்தார். மேலும், இந்த தலைப்பை வைக்க காரணம் என்ன என்று தெரியுமா என்று என்னை கேட்டார். நானும் எனக்கு தெரிந்த பதிலாக, கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நமக்கு நாமே என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தினார். அதுதான் காரணமாக இருக்கும் என்று நினைத்து, அதை அவரிடம் குறிப்பிட்டேன். ஆனால், காரணம் அதுவல்ல, இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஆட்சியை, முதலமைச்சரை இனியும் நம்பி எந்த பயனுமில்லை, எனவே நமக்கு நாமே நமது தேவைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தவே இந்த தலைப்பை வைத்ததாக தலைவர் கலைஞர் அவர்கள் தெரிவித்தார்கள்.
கேலி கிண்டல்
நான் இந்த பயணத்தை தொடங்கிய போது, பல பேர், பத்திரிக்கைகள் கேலி, கிண்டல் செய்தன. பிறகு இந்த பயணத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியை கண்டு தங்கள் நிலையை மாற்றி கொண்டன. அதே போல சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா கூட அரை மணி நேர உரையில் பாதி நேரம் நமக்கு நாமே பயணத்தை பற்றி தான் பேசினார். ஒரே வரியில் இந்த பயணம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்னவென்றால், அரசியல்வாதிகள், பொறுப்பில் உள்ளவர்கள் தான் மக்களை தேடி வர வேண்டும் என்பதே. எல்லாத்தரப்பு மக்களையும் சந்தித்து, உரையாடி, கலந்து பேசி, விவாதித்து, விளக்கங்களை அளிக்கும் வகையில் இந்த பயணம் நடைபெறுகிறது. மருத்துவத்துறை நிபுணர்கள், இங்கே பலர் தங்கள் பிரச்சினைகளை எடுத்து சொல்லி உள்ளீர்கள். என் அன்பான அழைப்பை ஏற்று கொண்டு இங்கு வந்ததற்கு முதலில் நன்றி. திமுக தலைமை சார்பில், தலைவர் கலைஞர் சார்பில் வரவேற்கிறேன். இதயபூர்வமான நன்றி.
நம்பிக்கை
பல மாநிலங்களில், வெளிநாடுகளில், கழக, பொது, அரசு நிகழ்ச்சிகள், மாநாடுகள் என எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் இந்த வாய்ப்பை ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக உள்ளது. நம்பிக்கையோடு உங்கள் கோரிக்கைகளை சுட்டிக்காட்டி நீங்கள் பேசிய போது, அழைப்பை விட நம்பிக்கை வைத்து வந்துள்ளீர்கள். உங்களுக்கு என்றைக்கும் நாங்கள் கடமைப்பட்டவர்கள். இன்னும் 5 நாளில் பொங்கல் திருநாள். புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். புத்தாண்டில் உங்களை எல்லாம் இன்று சந்திக்கிறேன். இந்த புத்தாண்டிற்கு சிறப்பம்சம் இருக்கிறது. 31.12.2015 நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் "17 SUSTAINABLE DEVELOPMENT GOALS" அமலுக்கு வந்திருக்கிறது. இந்த உயரிய நோக்கம், உயரிய சிந்தனை அமலுக்கு வந்த பத்தாவது நாளில் உங்களையெல்லாம் சந்தித்துப் பேசுவதற்கு உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.
நோயற்ற வாழ்வே
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது நானும் நீங்களும் கேட்ட பழமொழி. முதுமொழி. அதையே இப்போது ஐ.நா. மன்றம் வலியுறுத்தியிருக்கிறது. அதுதான் இந்த SUSTAINABLE DEVELOPMENT GOAL"- 2030 ஆம் வருடத்திற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆக அடுத்த 15 வருடங்களில் மக்களின் சுகாதார தேவைகளுக்கு, உரிய சிகிச்சை முறைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஐ.நா. மன்றம் கூறியிருக்கிறது. "நோயற்ற உலகம்", "சிறப்பான சுகாதார சேவை கிடைக்கும் உலகம்" "ஊட்டச்சத்து நிறைந்த உலகம்"- போன்றவை மக்களின் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது.. அதன் அடுத்த இலக்காக: "அனைவருக்கும் சுகாதார வசதிகள்" (UNIVERSAL HEALTH) "அனைவருக்கும் தரமான சிகிச்சை" ( QUALITY HEALTH CARE) என்ற உறுதியை அனைத்து உலக நாடுகளும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது ஐ.நா. மன்றம். இன்றைக்கு உங்களை எல்லாம் நான் சந்திப்பதும் இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான்.
உங்கள் கருத்து
ஐ.நா. மன்றம் உலக நாடுகளில் எப்படி தரமான மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும், சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது ? நான் உங்களிடம் தமிழக மக்களுக்கு- உங்கள் பிள்ளைகளுக்கும், இந்த மண்ணின் மைந்தர்களுக்கும் எப்படிப்பட்ட தரமான சிகிச்சை வழங்க வேண்டும் ? நோயற்ற வாழ்வை அவர்கள் நடத்த, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க, மலைபோல் உள்ள மருத்துவ செலவுகளில் குடும்பங்கள் நசுங்கிப் போகாமல் காப்பாற்ற, உங்கள் கருத்துக்களை இன்று கேட்டுள்ளேன். மற்ற நாடுகள் போல் நாம் இன்னும் முன்னேறவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. நான் இதற்கு முன்பு "நமக்கு நாமே" பயணத்தில் மாணவர்களை இளைஞர்களை சந்தித்தேன். தொழில் முனைவோரை, தாய்மார்களை, முதியோர்களை சந்தித்தேன்.
கலந்துரையாடல்
ஆக இவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இன்றைக்கு உங்களை நான் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தியிருக்கிறேன். உடனே உங்களுக்கு ஒரு கேள்வி எழக்கூடும். நீங்கள் ஆட்சியிலிருந்தவர்தானே. உங்கள் கட்சி ஆட்சியிலிருந்த கட்சிதானே. அதிலும் நீங்கள் துணை முதல்வராக இருந்திருக்கிறீர்களே என்று கருதலாம். எந்த நிலையில் இருந்தாலும், எந்நாளும் உங்களில் ஒருவன் என்ற நிலையில் தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அப்போது எல்லாம் இந்த யோசனை வரவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் கழக ஆட்சி இன்றைக்கு எந்த இலக்கை நோக்கி பயணிக்க ஆசைப்படுகிறோமோ அந்த இலக்கை நோக்கி அன்றைக்கே பயணம் செய்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
கர்ப்பிணிகள் நலம்
தலைவர் கலைஞர் முதல் முறையாக முதல்வராக இருந்த போதுதான் 6-8 வகுப்பு வரை உள்ளவர்களுக்கு "கண்ணொளி வழங்கும் திட்டத்தை" அறிவித்தார். சுகாதாரமா வாழ்வு, தாய் சேய் நலன், பிறக்கூடிய 1989ல் கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம். சென்ற முறை கழக ஆட்சி நடைபெற்ற போது கூட, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள 30 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்ய வழி வகுத்தவர் தலைவர் கலைஞர். 1939 ஆம் வருட தமிழ் நாடு சுகாதாரச் சட்டத்திற்கு மீண்டும் புதுப் பொலிவு கொடுத்து, 1970ல் திருத்தங்களைக் கொண்டு வந்தார். அந்த சட்டத்தின் முக்கிய இலக்கு என்னவென்றால்- சுற்றுப்புற சுகாதாரம், சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு, தாய் சேய் நல வாழ்வு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அந்த சட்டத்தில் இடம்பெற்றன. பிறக்கின்ற குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும், பெற்றெடுக்கும் தாய்மார்களும் ஆரோக்கியமாக இருக்க என்பதற்காகவே 1989ல் ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர் "கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி" அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
வரும் முன் காப்போம்
இன்றைக்கு 24 X 7 என்று, நாள் முழுக்க "நியூஸ் சேனல்கள்" இருப்பதை போல அன்றைக்கு 1996-2001 காலகட்டத்திலேயே, கழக ஆட்சி நடைபெற்ற போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் "24X7 சேவை"க் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர். நோய் வரும் முன்பே அதைக் கண்டறியும் "வரும்முன் காப்போம்" திட்டமும் கொண்டு வரப்பட்டது. 14 ஆயிரத்து 594 முகாம்கள் நடத்தப்பட்டு, 141 லட்சம் பேர் பயன் பெற்று உள்ளார்கள். 2006-முதல் 2011 வரை ஆட்சியிலிருந்த போது தான் "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்" கொண்டு வரப்பட்டது. நீங்களே அதுகுறித்து பெருமையாக பேசி இன்றைய நிலையையும் ஒப்பிட்டு வருத்தத்தை வெலிப்படுத்திஈர்கல்.
51 வகை நோய்களுக்கு
51 வகை நோய்கள் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டு அவற்றுக்கு 565 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பங்களிப்பு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் 1 கோடியே 41 லட்சம் பேர் பயனடைந்தார்கள். இப்போதுள்ள வருமான வரம்பான 72 ஆயிரம் ரூபாயை நீக்கி விட்டு அதை 2.50 லட்சம் ரூபாயாக மாற்ற வேண்டும். அதே போல் 108 ஆம்புலன்ஸ் சேவையின் கீழ் முதலில் 385 ஆம்புலன்ஸுகள் விடப்பட்டன. பிறகு அது மேலும் 445 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்போது எல்லாம் விபத்துக்குள்ளானவர்களை அருகில் உள்ள அரசு மருத்துமனைக்கே கொண்டு போகிறார்கள்.
ஆம்புலன்ஸ் சேவை
ஆனால் கழக ஆட்சியில் அரசு மருத்துமனையோ அல்லது தனியார் மருத்துமனையோ எங்கு கொண்டு போனாலும் சரி, உயிர் பிழைக்க வைக்க வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 3 லட்சத்து 80 ஆயிரத்து 840 பேருக்கு வழங்கப்பட்டது. இந்த சேவை மூலம் கழக ஆட்சியில் 17000 பேரை மரணத்தின் வாயிலில் இருந்து காப்பாற்றியுள்ளோம். கழக அரசின் கொள்கையே: "தரமான மருத்துவ சேவை" "தரமான மருத்துவர்கள்". "மக்களின் நண்பனாக அரசு மருத்துமனைகள்"- என்ற உன்னத நோக்கத்துடன்தான் ஒவ்வொரு முறையும் கலைஞர் ஆட்சியில் பணிகள் நடைபெற்றன.
பெண் சிசு காப்பு
ஆனாலும் தமிழக மக்களுக்கு அனைத்து சுகாதார வசதிகளையும் வழங்க இன்னும் "மைல் கணக்கில்" போக வேண்டியதிருக்கிறது. அனைவருக்கும் எளிதில் உயர் தர சிகிச்சைகள் அளிக்கும் நோக்கத்தை நிறைவேற்ற மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதிருக்கிறது. இன்று தமிழகத்தில் ஆண்- பெண் குழந்தைகள் Ratio குறைந்து 6 வயது குழந்தைகள் என்று எடுத்துக் கொண்டால் 1000 ஆண் குழந்தைகளுக்கு 943 பெண்குழந்தைகள் என்ற நிலை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஆண் குழந்தைகளை விட பெண்கள் குழந்தைகளின் எண்ணிக்கை மாநில அளவில் மிகக் குறைந்து விட்டது.
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்
நான்கில் மூன்று குழந்தைகள் பிறந்து 28 நாட்களுக்குள் இறந்து விடுகின்றன. அதுவும் 77 சதவீதம் குழந்தைகள் பிறந்த முதல் ஏழு நாட்களுக்குள் இறந்து விடுகின்ற என்ற அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் இருந்தும் கர்ப்பிணித் தாய்மார்களை ரத்த சோகை நோய் ஆட்டிப் படைக்கிறது. இந்த வகையான பிரச்சினைகளால் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிரசவ நேர மரணங்கள் நிகழும் ஆபத்து தமிழகத்தில் உருவாகியிருக்கிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடு
தமிழகத்தில் 31 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துக் குறைபாடு இருக்கிறது. நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களை நாம் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக ஆக்குவதற்கான நடவடிக்கைகளில் உடனே ஈடுபட வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால் 25 தாய்மார்கள்தான் இறக்கிறார்கள். அந்த நிலைக்கு தாய்மார்களின் இறப்பு விகிதத்தைக் குறைக்கவாவது நாம் பாடுபட வேண்டும். அதே போல் 1000 குழந்தைகள் பிறந்தால் 10 குழந்தைகள்தான் வளர்ந்து வரும் நாடுகளில் இறக்கின்றன. இந்த நிலைக்கு நம் குழந்தைகளின் இறப்பு விதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்துணவுக் கூடை
இதற்கு நாம் உடனடியாக "சத்துணவுக் கூடை" வழங்கும் முறையை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குறிப்பாக ஏழைத் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் அனைவருக்கும் நாம் இந்த "சத்துணவுக் கூடை" மூலம் ஆரோக்கியமான உடல்நிலையை ஏற்படுத்தித் தரவேண்டும். அடுத்து குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பு ஊசிகள் விஷயத்தில் நிலவும் அவல நிலைமை மேலும் வேதனை அளிக்க கூடியதாக உள்ளது. பத்து குழந்தைகளில் நான்கு குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவிலான தடுப்பு மருந்துகளை பெறுவதில்லை. 80 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டிருந்த மாநிலம் இன்றைக்கு 56.2 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிகிறது. இதை நான் ஏதோ பொத்தாம் பொதுவாகச் சொல்வதாக யாரும் கருதவேண்டாம்.
மது விலக்கு
புகையிலை ஆதிக்கம், தரமற்ற உணவுகள், முறையான உடற்பயிற்சி இல்லாதது, மது- என்று உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பல்வேறு சூழ்நிலைகளால் சுற்றுப்புற சூழல் கெட்டுப் போயிருக்கிறது. அதனால் தான் புகையிலைக்கான வரிகளை கழக அரசு இருந்த போது அதிகமாக உயர்த்தியது. மதுவின் கொடுமையை நாம் பல குடும்பங்களில் பார்க்கிறோம். அதை உணர்ந்து தான் "மதுவிலக்கு" வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். "மதுவிலக்கை அமல்படுத்த முதல் கையெழுத்துப் போடப்படும்" என்று தலைவர் கலைஞர் வாக்குறுதியாக தனது உறுதிமொழியை தந்துள்ளார். அதை நான் செல்லும் இடங்களிலும் சொல்கிறேன். இங்கும் கூட அழுத்தம் திருத்தமாக சொல்ல விரும்புகிறேன். உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் மதுவை கழக ஆட்சி நிச்சயம் ஒழித்தே தீரும்.
சுகாதாரக் கொள்கை
இன்று கிராமங்களில் கூட இதுவரை கேள்விப்படாத நோய்களுக்கு அவர்கள் உள்ளாகிறார்கள் என்பது வேதனையானது. நமது சுகாதாரக் கொள்கையில் உள்ள மிகப்பெரிய ஓட்டை என்றே அந்த ஓட்டையை அடைக்க ஒரு "தேசிய அளவிலான சுகாதாரக் கொள்கை" வகுக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். முதலில் மாநில அளவில் மக்கள் நண்பனாகத் திகழும் "தெளிவான சுகாதாரக் கொள்கை" ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
தொற்றா நோய்
அந்தக் கொள்கை தொற்றும் நோயை (Communicable Disease) மட்டும் மனதில் வைத்து இல்லாமல், தொற்றா நோயையும் (Non- Communicable Disease) மனதில் வைத்து அமைய வேண்டும். இன்றைக்கு இருக்கின்ற 1750 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 186 சுகாதார நிலையங்களுக்கு சொந்தக் கட்டிடம் இல்லை. 8 ஆயிரத்து 706 துணை சுகாதார நிலையங்களில் 1917 துணை சுகாதார நிலையங்களுக்கு சொந்தக் கட்டிடம் இல்லை? நோய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இங்கிருந்து தான் துவங்க நாம் வேண்டியதிருக்கிறது. அதனால், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் "உட்கட்டமைப்பு வசதிகளை" செய்து தர வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தொற்றா நோயை (Non- Communicable Disease)க் கட்டுப்படுத்த நாம் நடவடிக்கையை துவங்கிட வேண்டும்.
ஆரம்ப சுகாதார மையங்கள்
அதிமுக ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற பிரசவங்கள் 81 ஆயிரத்து 190 மட்டுமே. ஆனால் கழக ஆட்சில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற பிரசவங்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 582. அப்படியென்றால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கழக அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அடுத்தாற்போல் இருக்கின்ற துணை சுகாதார நிலையங்களும் மேம்படுத்தப்பட வேண்டும். இந்த இரண்டிற்கும் மேல் உள்ள வட்டார மற்றும் மாவட்ட மருத்துவமனைகளும் தரமான சிகிச்சை கிடைக்கும் இடங்களாக மாற்றப்பட வேண்டும்.
புற்று நோய் ஆதிக்கம்
இன்று புற்று நோய் ஆதிக்கம் கிராமங்களில் கூட தென்படுகிறது. கிராமங்களில் உள்ள அப்பாவி மக்கள் என்ன நோய் நமக்கு வந்திருக்கிறது என்று தெரியாமலேயே இறந்து போகும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. அதனை அடியோடு அகற்ற, புற்றுநோய் பற்றி கிராமங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் கண்டிப்பாக ஒரு புற்றுநோய்க்கான டாக்டர் ONGOLOSIST நியமிக்கப்பட வேண்டியது மிக அவசியம்.
முதியோர் நலம்
நாம் மிக அழகாகச் சொல்வோம். "முதுமையிலும் இளமை காணலாம்" என்று. ஆனால் இன்று என்ன நடக்கிறது? முதுமையில் உள்ளோர்தான் - ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் மூப்பியல் நோய் அனைவரையும் தாக்குகிறது. அவர்களுக்காக வழங்கப்படும் முதியோர் உதவித் தொகை கூட முறையாகச் சென்றடையவில்லை. பல மாவட்டங்களில் முதியோர் உதவித் திட்டத்தின் கீழ் இருந்த பயனாளிகளும் கூட நீக்கப்பட்டு விட்டார்கள். முதியோரின் நலனில் அக்கறை வைத்து "பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம்-2007" தமிழகத்தில் அமல்படுத்தியது கழக அரசுதான் என்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன். அவர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது மருத்துவ சிகிச்சைகள். உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களால் எங்கும் போக முடியாமல் தவிக்கிறார்கள். அது போன்ற முதியோருக்கு சிறப்புக் கவனம் செலுத்தி ஒரு "மருத்துவ வசதி" வழங்கும் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். எனவே முதியோருக்கான சிறப்பான நல்வாழ்வுத் திட்டம் உருவாக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மன நலம் குன்றியோர்
அதே போல் மன நலம் குன்றியவர்கள். இவர்களுக்காக கழக அரசு இருந்த போது 16 மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அந்த சிறப்பு பயிற்சியின் மூலம் மனம் நலம் குன்றியவர்கள் குணமாகி வீடு திரும்புவதற்கும், அதன் பிறகும் அவர்களின் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளவும் ஒரு பிரத்யேகத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். அதாவது மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமான பிறகு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது. இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது மனித நேயத்துடன் சிகிச்சை அளிப்பது என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
கருவறையிலிருந்து கல்லறை வரை
ஆகவே "கருவறையிலிருந்து கல்லறைக்குச் செல்லும்" வரை அனைத்து தரப்பினருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உறுதுணையாக நிற்க வேண்டும். அந்த நோக்கத்துடன் தான் இன்றைய தினம் உங்களுடன் இவ்வளவு நேரம் பேசம் வாய்ப்பை நாம் ஏற்படுத்தியுள்ளோம். "தரமான சிகிச்சை" வழங்க, "முறையான சோதனைகள் செய்ய" அனைத்து வசதிகளும் அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.
மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி
மாநகரங்களில் கிடைக்கும் மருத்து வசதி நகர்புறங்களுக்கும், நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்து வசதி கிராமப் புறங்களுக்கும் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் தரமான மருத்துவ சேவை என்பது அமையும் அரசின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இன்றைய தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடி. 1700 பேருக்கு ஒரு மருத்துவர்தான் தமிழகத்தில் இப்போது உள்ளார்கள். இதை 1000 பேருக்கு ஒரு மருத்துவராக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனால் தான் கழக அரசு இருந்த போது மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பதை கொள்கையளவில் செயல்படுத்த திட்டமிட்டோம்.
டாக்டர்கள் பெருகுவர்
புதிய கல்லூரிகளையும் அமைத்தோம். இன்றைக்கு கூட கழக அரசில் அறிவிக்கப்பட்ட, அல்லது அடிக்கல் நாட்டிய மருத்துவக் கல்லூரிகளுக்கே மீண்டும் புதிய அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது அரசு. தவிர புதிய கல்லூரிகளை துவக்கும் நிலையில் இல்லை. ஆகவே மீண்டும் கழக ஆட்சி உருவாகும்போது, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது நிறுவப்படும். அப்போது தான் டாக்டர்களின் எண்ணிக்கை பெருகும்.
டாக்டர்கள் பற்றாக்குறை
தமிழகத்தின் மக்கள் தொகை இன்றைக்கு 7 கோடி. ஆனால் நம் மருத்துமனைகளில் உள் நோயாளிகளாக இருந்து 82 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற முடியும். "டாக்டர்களுக்கு மனம் இருந்தாலும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க இடம் இல்லை" என்ற நிலை நிலவுகிறது. இதற்கு நாம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து தலைமை மருத்துமனை வரை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
முன்னேற்றம் வரும்
கிராமங்களில் கூட "உள் நோயாளிகளாக" சிகிச்சை பெறும் அளவிற்கு தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்குவது ஒரு புறமிருக்க, தனியார் மருத்துமனைகளுடனும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உயிர் காக்கும் சேவை வழங்குவதில் எதற்கு அரசியல்? அதை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, மக்கள் உடல் நலத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்று நாம் இந்த நிகழ்ச்சியில் உறுதியெடுத்து கொள்ள வேண்டும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உட்கட்டமைப்பு இடைவெளி 44.6 சதவீதம் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். 25000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்றும், 4000 முதல் 5000 பேருக்கு ஒரு துணை சுகாதார நிலையம் என்றும் நம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் உறுதியாக மருத்துவத்துறையில் முன்னேற்றத்தை மேற்கொள்ள முடியும்.
சித்த மருத்துவம்
ஆங்கில மருத்து சிகிச்சைக்கு துணையாகவோ, இணையாகவோ சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதனால் தான் கழக ஆட்சி இருந்த போது சித்த மருத்துவத்தை முறைப்படுத்த சட்டம் கொண்டு வந்தோம். 1997-ம் ஆண்டு ‘தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்' என்ற ஒன்றை அரசு அமைத்தது. அதன் மூலம் சித்த மருத்துவர்கள் நலன் பாதுகாக்கப்பட்டது. முறைப்படி சான்றிதழ்கள் வழங்கி அவர்களும் மக்களின் சேவையில் இணைந்து செயல்படுவதற்கு வழி வகுக்கப்பட்டது. அதே நேரத்தில் அதில் "சில போலி டாக்டர்களும்" புகுந்து விடுகிறார்கள். அவர்களை கலையெடுத்து, சித்த மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்திற்கு துணையாகவோ, இணையாகவோ, கிராம அளவிலேயே கொண்டு வர வேண்டும். அது மக்களின் ஆரோக்கியத்தை நிலைநாட்ட பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சுகாதாரத்தைப் பேணிக் காக்க
ஆகவே "சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி" மூலம் மக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காக்க, அமெரிக்க மாடலில் உள்ளது போல "நர்ஸுகள் பயிற்சி" முறையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். இவை ஒரு புறமிருக்க, மருத்துவத்திற்கு ஆகும் செலவுதான் ஒவ்வொரு குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக நசுக்கி விடுகிறது. அதற்காகவே தலைவர் "உயரிய சிகிச்சை காப்பீடு திட்டங்களை" தலைவர் கலைஞர் கொண்டு வந்தார்.
விலை குறைய வேண்டும்
மருந்து மாத்திரைகளின் விலை கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஏழை எளிய மக்களும் எளிதில் வாங்கும் அளவிற்கு அவற்றின் விலை குறைக்கப்பட ஒரு தேசியக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். ஏன் விலை அதிகமான மருந்து மாத்திரைகளை அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக வழங்கலாம். அல்லது அந்த மருந்து மாத்திரைகளையும் "இன்சூரன்ஸ்" திட்டத்தின் கீழேயே கொண்டு வந்து விட முடியுமா என்பது பற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக சிகிச்சைக்குப் பிறகு தேவைப்படும் மருந்து மாத்திரைகளுக்கான "பேக்கேஜ்" கொண்டு வர வேண்டும் என்பது எனது விருப்பம். இன்றை. தினம் இங்கே நீங்கள் பல அரிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
அர்த்தமுள்ள விவாதம்
உள்ளபடியே ஒரு ஆரோக்கியமான, அர்த்தமுள்ள விவாதமாக இந்த கருத்தரங்கம் மாறியிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தமிழகம் ஏதோ மருத்துவத்துறையில் சாதிக்காத மாநிலம் அல்ல. இன்று பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் கூட இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கோவைக்கு, சென்னை மாநகரை நோக்கி சிகிச்சைக்காக வருவதை நாம் பார்க்கிறோம். அந்த சிகிச்சை, தனியார் மருத்துவமனைகளில் உள்ள அந்த தரமான உயரிய சிகிச்சை கடைக்கோடி தமிழனுக்கும் கிடைக்க வேண்டும். அதுதான் என் நோக்கம்.
சீர்குலைக்கப்பட்ட மகப்பேறு நிதியுதவி
இங்கே பெண் மருத்துவர்களும் அமர்ந்திருக்கிறீர்கள். டாக்டர் பட்டம் வாங்கிய முதல் பெண்மணி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாநிலம் கோவை. அவர் பெயரில்தான் கழக அரசில் மகப்பேறு நிதியுதவித் திட்டமே தலைவர் கலைஞரின் அரசு கொண்டு வந்தது என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. ஏறக்குறைய 20 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு 2006-2011ல் மட்டும் மகப்பேறு நிதியுதவி அளித்து இந்த தாய்க்குலம் போற்றப்பட வேண்டும் என்று விரும்பினோம். அந்தத் திட்டம் இப்போது எப்படியெல்லாம் இந்த ஆட்சியில் சீர்குலைக்கப்பட்டுள்ளது.
நன்றிக் கடன் பட்டுள்ளேன்
இந்த "நமக்கு நாமே" கருத்தரங்கில் உங்களை சந்தித்ததன் மூலம், நம் எதிர்கால நம்பிக்கை நாயகர்களை, அவர்களை பெற்றெடுத்த தாய்மார்களை, ஏன்- குழந்தை முதல் முதியோர் வரை உள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளம் அமைக்க நீங்கள் அளித்த ஆலோசனைகளைப் பார்த்து உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது சிரமங்களை எல்லாம் பார்க்காமல் நீங்கள் எல்லாம் இங்கே வந்து சொன்ன கருத்துக்களுக்கு நான் என்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன். இந்த புத்தாண்டில் உங்கள் ஆலோசனைகளை நிறைவேற்ற, இந்த அரங்கில் நானும் நீங்களும் சேர்ந்து உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நோய்கள் வந்திருப்பதற்கான காரணங்களை அறிய வேண்டியது இங்கே அமர்ந்துள்ள நீங்கள். அந்த நோயைக் கட்டுப்படுத்த உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டியவர்கள் எங்களைப் போன்ற அரசியல்வாதிகள்.
உங்களுக்கு துணை நிற்போம்
"சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்" என்பது அந்த எண்ணைத்தை நிறைவேற நாம் அனைவரும் பாடுபடுவோம். விரைவில், திமுக தலைவர் கலைஞர் அவர்களின் அரசு உருவாகும்போது, அது உங்களுக்கு துணையாக நிற்கும். அதுபோல் எங்களுக்கு நீங்கள் துணையாக நிற்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். மக்களின் சேவை. மனித நேயமிக்க சேவை. மனித குலத்தை காப்பாற்றும் சேவை; நலமான தமிழகமே, வளமான தமிழகம் என்ற உறுதியுடனும் To conclude this highly informative and interesting interaction i assure and vow before you that Health and Education will be the top priority of Dmk govt. Let us strive for Healthy State in the New year. Thank you.