ஸ்பெக்ட்ரத்தில் வலுவான திமுக- காங் கூட்டணி ஸ்பெக்ட்ரத்தாலேயே முறிந்தது?
சென்னை: எத்தனையோ அரசியல் நிலநடுக்கங்களுக்கும் மத்தியிலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை நெருக்கமாக்கிக் கொண்ட திமுக இப்போது அதே ஸ்பெக்ட்ரம் வடுவாலேயே கூட்டணியை முறிக்கிறோம் என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் ஈழப் பிரச்சனை உச்சகட்டத்தில் இருந்தது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மத்தியில் காங்கிரஸ் அரசே அமைந்தது. ஆனால் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த இது ஒரு முக்கியமான காரணமாகவும் இருந்தது.
அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியுடனான உறவில் நீக்கு போக்கை கடைபிடிக்கத் தொடங்கியது திமுக. ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக உரிமை பிரச்சனைகளில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உரத்தும் குரல் கொடுக்கத் தொடங்கியது. இதன் உச்சகட்டமாக மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பவும் பெற்றது திமுக.
ஸ்டாலின் உறுதி..
மத்திய அரசுக்கான ஆதரவை திமுக திரும்பப் பெற்றது முதல் காங்கிரஸுடன் இனி ஒருபோதும் கூட்டணியே கிடையாது என்று அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்தார்.
ராஜ்யசபா தேர்தலில்..
ஆனால் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸின் ஆதரவை திமுக கோரியதால் அனேகமாக திமுக- காங்கிரஸ் உறவு மீண்டும் மலரும் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.
ஏ.கே. அந்தோணி, சிதம்பரம்
திமுகவுடனான கூட்டணியை தக்க வைத்துக் கொள்வதில் காங்கிரஸ் வெகுமுனைப்புடன் இருந்தது. இருதரப்பு உறவில் சிக்கல் வரும்போதெல்லாம் ஏ.கே. அந்தோணி, ப.சிதம்பரம் போன்றோர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
காமன்வெல்த்தில் உச்சம்
ஆனாலும் காமன்வெல்த் விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்து இலங்கை மாநாட்டில் அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டது திமுகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போதே காங்கிரஸுடனான கூட்டணி முறிவுக்கான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று சொல்லப்பட்டது.
பாஜக பக்கம் சாயுமா?
இந்த நிலையில் ஏற்காடு தேர்தலில் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியது, பாஜகவின் தீவிர ஆதரவாளரான சோ வீட்டு திருமணத்தில் குடும்ப சகிதமாக கருணாநிதி கலந்து கொண்டது என தொடர்ந்த நிகழ்வுகள், திமுக பாஜக பக்கம் சாய்கிறதோ என்ற எண்ணத்தையும் உருவாக்கி வைத்தது.
வேட்டு வைத்தது ஸ்பெக்ட்ரம்?
இருப்பினும் ஸ்பெக்ட்ரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிரானதாகவே இருக்கிறது. இது தொடர்பாக ஆ.ராசாவை விசாரிக்க வேண்டும் என்பது உட்பட திமுக முன்வைத்த எந்த கோரிக்கையையும் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலிக்கவும் இல்லை. இந்த அறிக்கையும் எந்த விவாதத்தையும் நடத்தாமல் நாடாளுமன்றத்தில் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் முழுப் பழியையும் ராசா- திமுக மீது போட்டுவிட்டு தப்பிக்க முயல்கிறது காங்கிரஸ். இதற்கு நாடாளுமன்றத்தில் திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பொதுக்குழு பேச்சில் தாக்கம்..
இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம்தான் திமுக தலைமையை மிகக் கடுமையாக காயப்படுத்தியிருக்கிறது என்பதையே நேற்றைய கருணாநிதியின் பொதுக் குழு பேச்சும் வெளிப்படுத்துகிறது. கருணாநிதி தமது பேச்சின் போது, ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா சிறைக்குப் போனது என்பது தனிமனிதரல்ல. திமுகவுக்கு ஏற்பட்ட காயம். வடு என்றெல்லாம் பேசியும் இருக்கிறார்.
ஸ்பெக்ட்ரத்தில் தொடங்கி..ஸ்பெக்ட்ரத்தில் முடிவு?
ஒருகட்டத்தில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் சிக்கியதற்காக காங்கிரஸ் கூட்டணியில் நீடித்தாக வேண்டிய நிலைமை திமுகவுக்கு இருந்தது. அப்போது ஈழப் படுகொலை உள்ளிட்ட உச்ச அவலங்கள் நடந்தேறின. இதனால் காங்கிரஸுடன் திமுகவும் சேர்ந்து பழியை சுமந்தது. இப்போது அந்த ஸ்பெக்ட்ரம் காயம் வடுவாகவே இருக்கிறது என்று கூறி கூட்டணியையும் முறித்துக் கொண்டு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது திமுக. இப்புதிய பாதை திமுகவுக்கு கை கொடுக்குமா?