இது ஒபாமா ஸ்டைல்...அம்மாவுக்கு ‘பாதகமானதை’ தனக்கு சாதகமாக்க முயலும் கருணாநிதி!
சென்னை: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையமும், கட்சிகளும் ஏற்கனவே தொடங்கி விட்டன.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தங்களது கட்சிகளைப் பலப்படுத்தும் பணிகளிலும் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் வந்தால் தான் அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களின் நினைவு இந்த அரசியல்வாதிகளுக்கு வரும். அப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வாக்காளர்களைக் கவர்வதற்கான முயற்சிகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர்.
பேஸ்புக்கில் பிரச்சாரம்...
அந்தவகையில், வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் கவர்ந்த சமூகவலைதளத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கான களமாகப் பயன்படுத்த திமுக தீவிரம் காட்டி வருகிறதாம்.
வாட்ஸ் அப் குழுக்கள்...
இதற்கென வாட்ஸ் அப்களில் பல குழுக்கள் உருவாக்கப்பட்டு அதில் திமுக ஆட்சியின் பெருமைகள் விளக்கப்பட்டு வருகிறதாம்.
சக்சஸ் பார்முலா...
ஏற்கனவே அமெரிக்காவில் ஒபாமாவும், மத்தியில் மோடியும் இந்த பார்முலாவைப் பயன்படுத்தியே வெற்றியைத் தங்களுக்கு சாதகமாக்கினார்கள் என்பது ஊரறிந்த விஷயம். எனவே, அதே பார்முலாவைத் தாங்களும் செயல்படுத்திப் பார்க்க திமுக முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
வாட்ஸ் அப் பேச்சு...
ஏற்கனவே சென்னை வெள்ளத்தின் போது ஜெயலலிதா வாட்ஸ் அப்பில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாதகமான விளைவுகளுக்குப் பதில் எதிர்மறையான விளைவையே அது தந்தது. சொந்த வாயால் சூனியம் வைத்துக் கொண்டார் என அவரை சமூகவலைதளங்களில் மக்கள் விமர்சித்தனர்.
கவனம் தேவை...
இந்த சூழ்நிலையில், தங்களைக் குறித்து இது போன்ற எந்தக் கெட்டப்பெயரும் வந்து விடக்கூடாது என்பதில் கட்சித் தலைவர் கவனமாக இருக்கிறாராம். இதன் எதிரொலி தான் சமீபத்தில் வெளியான கட் அவுட்கள், பேனர்கள் வைக்க வேண்டாம் என உத்தரவு என்கிறது கட்சி வட்டாரத் தகவல்.
பொங்கல் வாழ்த்து...
சமீபத்தில் தனது பொங்கல் வாழ்த்தினை வீடியோவாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருணாநிதி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.