காவிரி.. ஒரு கையால் பாஜகவுக்கு பளார்.. மறு கையால் கர்நாடக காங்.குக்கு சூடு போட்ட கருணாநிதி!
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய பாஜக அரசை வறுத்தெடுத்த திமுக தலைவர் கருணாநிதி கர்நாடகா காங்கிரஸையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த கூட்டணி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
இதனால் திமுக- பாஜக கூட்டணிக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமர் மோடியையும் பாஜகவையும் தொடர்ந்து கடுமையாக கருணாநிதி விமர்ச்சித்து வருகிறார்.
காங்கிரஸுக்கு வார்னிங்
அதே நேரத்தில் தமிழக காங்கிரஸுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் காவிரி பிரச்சனையில் கர்நாடகா காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளார் கருணாநிதி. இது தொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தேர்தல் வெற்றிக்காக...
அடுத்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் இப்போதிருந்தே மோதிக் கொள்ளத் தொடங்கியுள்ளன. அதிலே ஒரு கட்டம்தான் தற்போதைய காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள்.
மேகதாது
இது பற்றி "ஆனந்த விகடன்" இதழிலே கூட தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
நியாயமாக நடக்குமா?
முதலில் பெங்களூரு நகரின் குடி நீர் தேவைக்காகத்தான் மேகதாது அணை என்றார்கள். தற்போது, மேகதாது அணையில் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் உள்ளது என்று கர்நாடக முதலமைச்சர் கூறுகிறார். காவிரி மேலாண்மை வாரியத்தில் தமிழகத்தைக் கை கழுவிய மத்திய அரசு, மேகதாது அணைப் பிரச்சினையில் மட்டும் நியாயமாக நடந்து கொள்ளும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?