நதிநீர் பாதுகாப்பு கமிட்டி தேவை- கொசஸ்தலையில் ஆந்திரா தடுப்பணையை ஆய்வு செய்த ஸ்டாலின் கோரிக்கை
நதிநீர் பிரச்னைகளை தீர்க்க நதி நீர் பாதுகாப்பு கமிட்டியை அமைக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் : நதிநீர் பிரச்னைகளை தீர்க்க நதி நீர் பாதுகாப்பு கமிட்டியை அமைக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளதாககம் அனதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சித்தூர் சீதலகுப்பத்தில் ஆற்றின் குறுக்கே 4 இடங்களில் ஆந்திர அரசு அணை கட்டுகிறது. கொசஸ்தலை ஆற்றின் கிளை ஆறான லங்கா ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டும் பணியை தொடங்கியுள்ளது. லங்கா ஆற்றின் 4 இடங்களில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் வேலூர் குப்பம் கங்குந்தி இடையில் பாலாறு பாயும் 1 கிலோ மீட்டரில் உள்ள தரைப்பாலத்தை மாற்றி, உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை இன்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர் ரூ.4.5 கோடி செலவில் உயர்மட்டப் பாலமாக கட்டும் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியிருப்பது வேதனைக்குரியது.
விவசாயிகள் பாதிப்பு
ஏற்கனவே வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாலாறு மற்றும் கொசஸ்தலை ஆகிய ஆறுகள் மூலம் வர வேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தட்டிக் கேட்காத அரசு
இதையெல்லாம் தட்டிக் கேட்டு, நம் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசோ, தங்களுடைய அரசை காப்பாற்றிக் கொள்ள குதிரை பேர ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இது தரைமட்டப்பாலம் என்று தெரிவித்தாலும், வருங்காலத்தில் தடுப்பணையாக மாற்றப்படும் என்ற அச்சம் விவசாயப் பெருங்குடி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை வேண்டும்
எனவே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு விழித்துக் கொண்டு செயல்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
கமிட்டி அமையுங்கள்
அதேபோல, நதி நீர் பிரச்சனைகளை கண்காணித்து, உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட ‘நதி நீர் பாதுகாப்பு கமிட்டி' ஒன்றை அமைக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, அந்தப் பணியையும் உடனடியாக மேற்கொண்டு இதுபோன்ற சூழ்நிலைகளை தடுக்க வேண்டும், என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.