தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி போராட்டம்- ராமதாஸ் அறிவிப்பு
கடலூர்: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முற்றாக மூடக்கோரி போராட்டம் நடத்தப் போவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் வன்னியர் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது:
47 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழக மக்களை சீரழித்து விட்டன. 2 கட்சிகளும் சேர்ந்து தமிழக மக்களை குடிகாரர்களாக ஆக்கி விட்டார்கள். ம
2016-ல் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். வீரம், விவேகம், மனவலிமை இவைதான் வெற்றிக்கு மந்திர தாயத்து.
ஒரு வாய்ப்பு தாங்க
தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு பிரச்சினை நிலவி வருகிறது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் நலமாக, நிம்மதியாக வாழ்வார்கள். காவல்துறை சுதந்திரமாக செயல்படும். ஏவல்துறையாக செயல்படாது. ஆகவே பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
மது ஒழிப்பு
பா.ம.க. 2016-ல் ஆட்சியை பிடிக்க ஒரே ஒரு கொள்கை போதும். அது தான் மதுவை ஒழிப்பது. மதுவை ஒழிக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மதுவை ஒழிக்காமல் மக்களுக்கு இலவச அரிசி கொடுப்பது எவ்வித பலனையும் தராது. அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு அளித்தால் அவர்களே அரிசியை வாங்கிக்கொள்வார்கள்.
முதல் கையெழுத்து
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பதற்கு தான் முதல் கையெழுத்து போடுவோம். மதுவை ஒழிக்க மாற்று கொள்கையை 2008-ம் ஆண்டே அரசுக்கு அளித்துள்ளோம். குடியிருப்பு வீடுகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளை வைக்கக்கூடாது. அதனை அகற்ற வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின்படி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி சென்னையில் வருகிற 1-ந்தேதி அல்லது 2-ந்தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடைபெறும்.
பெண்களே
தற்போது பெண்களே மது குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இளம்பெண்கள் மது வாங்குவது போல் இன்று காலை வெளிவந்துள்ள பத்திரிகையில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இப்படி பெண்களே டாஸ்மாக் கடையில் வந்து மதுவாங்கி குடிக்கிறார்கள் என்றால் நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் கூட ஞாயிற்றுக்கிழமை மதுக்கடை கிடையாது. பாரை ஒழிக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாராக இருக்கிறது. அதில் இளைஞர்கள் தான் அதிகம் உள்ளனர்.
-இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.