செப்.17 சமூக நீதி மாநாடு.. பாமகவினர் வீரப்பன் படம் போட்ட பனியன் அணிய ராமதாஸ் தடை!
சென்னை: விழுப்புரத்தில் வரும் செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி மாநாட்டை நடத்த இருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். வன்னியர் சங்க விழாவுக்கு வருவது போல, இந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
குறிப்பாக, வீரப்பன் படம் உள்ள பனியன்களை அணியக் கூடாது என உத்தரவிட்டுள்ளதை உன்னிப்பாகக் கவனிக்கின்றன வன்னியர் அமைப்புகள்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எவரும் செப்டம்பர் 17-ந்தேதியை மறக்க முடியாது. அது தந்தைப் பெரியாரின் பிறந்தநாள் மட்டுமல்ல;

சமூக நீதி பிழைப்பதற்காக
தமிழகத்தில் சமூகநீதி தழைப்பதற்காக 21 பேர் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த நாள். அந்த தியாகம் தான் தமிழ்நாட்டிலுள்ள 108 சமுதாயங்களைச் சேர்ந்த மூன்று கோடி மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்து சமூக நீதியை நிலை நிறுத்தியது. வரும் 17-ந்தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம் புறவழிச்சாலை ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டை பா.ம.க. மிகப்பெரிய அளவில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது.

சிறப்புரை
இந்த மாநாட்டில் நான் சிறப்புரை ஆற்றுகிறேன் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச இருக்கிறார். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஜெ.குரு ஆகியோர் மிகச்சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகின்றனர். பா.ம.க. சார்பில் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து மாநாடுகளையும் விஞ்சும் வகையில் இந்த சமூக நீதி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மைல் கல்லாக அமையும்
பா.ம.க. சமூக நீதி வரலாற்றில் இந்த மாநாடு நிச்சயமாக ஒரு மைல் கல்லாக அமையும் என்பது நிச்சயமாகும். தமிழகத்தின் சமூகநீதிப் பயணத்தில் இன்றைய காலக்கட்டம் என்பது மிகவும் முக்கியமானதாகும். சமூக நீதியையும், சமத்துவத்தையும் குலைப்பதற்கான சதிகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. எனவே இந்த மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்' என விவரித்திருந்தார்.

மேற்கூரையில் அமரக் கூடாது
இதுகுறித்து மாநிலம் முழுவதும் உள்ள பா.ம.க நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக வெளியிடப்பட்ட கையேட்டில், வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்யக் கூடாது; கட்சி மற்றும் சங்க கொடியை தலையில் முண்டாசாக அணியக் கூடாது;

சிங்கம் - வீரப்பன் பனியன் கூடவே கூடாது
சிங்கம், போர்வாள், அக்னி கலசம், வீரப்பன் படம் அச்சடிக்கப்பட்ட பனியன்களைப் பயன்படுத்தக் கூடாது; மதுபானம் அருந்தக் கூடாது; மதுபானக் கடை அருகில் கட்சிக் கொடி உள்ள வாகனத்தை நிறுத்தக் கூடாது; மாற்று சமுதாய மக்கள் வருந்தும்படி கோஷம் எழுப்பக் கூடாது என்பன உள்ளிட்ட 11 கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

ஏன் இந்த கண்டிப்பு
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ம.க நிர்வாகி ஒருவர், வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை திருவிழா நடக்கும் காலங்களில் தேவையற்ற சர்ச்சைகள் கிளம்புகின்றன. பா.ம.கவினர் கூடும் மாநாடுகளில் மதுபான வியாபாரம் அதிகம் நடப்பது போன்ற செய்திகள் வெளியாகின்றன. வன்னியர் சமூகத்து இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கம் பா.ம.க. அதற்காக நடக்கும் விழாவில் கட்சித் தொண்டர்கள் எல்லை மீறி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இதுபோன்ற உத்தரவை மருத்துவர் பிறப்பித்திருக்கிறார். வீரப்பன் படம் அணிவது என்பது குறிப்பிட்ட சாதிக்கான அடையாளமாக இருக்கும் என்பதால், அந்தப் படம் போட்ட பனியனைத் தவிர்க்கச் சொல்லிவிட்டார். நடப்பது சமூகநீதி மாநாடுதான். வன்னியர் சங்க மாநாடு அல்ல என்றார் விரிவாக.












Click it and Unblock the Notifications