10 "சரக்கு" பேரைச் சொல்லுங்க.. சியர்ஸ் சொல்லிட்டு குடிகாரர்கள் சங்கத்தில் மெம்பராய்ருங்க!
சென்னை: தமிழ்நாடு மது குடிப்போர் சங்கத்தில் உறுப்பினராக சேர பத்து மதுபானங்களின் பெயர்கள் தெரிந்திருக்க வேண்டுமாம். கரெக்டா சொன்னாத்தான் சங்கத்தில் சேத்துக்குவாங்களாம்.
மது குடித்து பாதிக்கப்படுவோருக்காக கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த சங்கத்தில் 3 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த சங்கத்தின் சார்பில் தமிழக காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க ஆலோசகர் திருச்சி தங்கவேல் தலைமை தாங்கினார்.
பலாத்காரம், கொலை, கொள்ளை, விபத்து என மது குடிப்போரால் தான் அதிகளவு குற்றங்கள் நடப்பதாக பலர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்க, காவலர் பற்றாக்குறையால் தான் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக இந்தச் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
அதனால் தான் தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் போராட்டத்தை அச்சங்கம் நடத்தியுள்ளது. இது தொடர்பாக சட்டசபைத் தேர்தல் காலத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
தங்களது சங்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அதன் தலைவர் செல்லப்பாண்டியன் கூறுகையில், "காவலர் பற்றாக்குறையால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஒருதலைக்காதல் கொலைகள், வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே காலியாக உள்ள 19 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நியமிக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் நிரப்பும் போது ஊர்காவல் படையில் உள்ள 16,000 பேருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், காவல்துறைக்குத் தனி ஆணையம் அமைக்க வேண்டும்" என்கிறார்.
மேலும், "தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்கில் தங்களது விலைமதிப்பு மிக்க உயிர்களை பணையம் வைத்து மது குடிக்கின்றனர். அவர்களால் அரசுக்கு ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் மது குடிப்பவர்களை அரசு கண்டுக்கொள்வதில்லை. தமிழக அரசு மதுவிலக்கு மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைப்பதாக அறிவித்தது. ஆனால் அது அறிவிப்போடு நிற்கின்றன. 234 தொகுதிகளிலும் மதுகுடிப்போருக்காக தனியாக மருத்துவமனைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் செல்லபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து இது குறித்து போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள இச்சங்கம், தங்களது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சில முக்கியமான கண்டிசன்களைப் போடுகிறது.
அதாவது, "எங்கள் சங்கத்தில் குறைந்தது 10 மதுபானங்களின் பெயர்கள் தெரிந்தால் மட்டுமே உறுப்பினர்களாக முடியும். மேலும் மது தொடர்பான அனைத்து விவரங்களும் குடிப்போருக்கு தெரிந்திருக்க வேண்டும்" எனக் கூறுகிறார் செல்லபாண்டியன்.












Click it and Unblock the Notifications