டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா வழக்கு.. விசாரிக்கப்பட்ட விஷ்ணுப்பிரியாவின் வக்கீல் தற்கொலை முயற்சி
மதுரை: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கில் விசாரிக்கப்பட்ட வழக்கறிஞர் மாளவியா தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான விஷ்ணு பிரியா கடந்த ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணம் போலீஸ் உயர் அதிகாரிகள்தான் என்று அவரது பெற்றோரும், தோழியும் குற்றம் சாட்டினர்.
விஷ்ணு பிரியா மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கையும், கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
காதல் பிரச்சினையா?
டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கு, அவரது தோழி டி.எஸ்.பி மகேஸ்வரி, திருக்கோஷ்டியூர் கோயில் குருக்கள் விஜயராகவன், மதுரை வழக்கறிஞர் மோனிக் மாளவியா ஆகிய மூன்று பேரை சுற்றத் தொடங்கியது. இதற்கான காரணமாக, விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கு முன்பாக இரண்டரை மணிநேரம் வழக்கறிஞர் மாளவியா பேசியுள்ளார்.
சிபிசிஐடி போலீஸ் விசாரணை
விஷ்ணுபிரியா தற்கொலை செய்வதற்கு முன்பாக மதுரை உயர்மன்றக்கிளை வழக்கறிஞர் மோனிக் மாளவியா என்பவர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அதாவது விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட தினத்தில் காலை 5 மணியில் இருந்து பிற்பகல் 2.45 மணிவரை 13 முறை பேசியிருக்கிறாராம்.
செல்போன் ஆதாரங்கள்
பிற்பகல் 2.10 மணிக்கு எஸ்.பி செந்தில்குமாரை அழைத்து விஷ்ணுபிரியா பேசியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 18ம் தேதி மதியம் 2.45 மணிக்கு மாளவியா உடன் பேசி முடித்த உடன் டி.எஸ்.பி மகேஸ்வரியிடம் இடம் அழைப்பு வரவே அவருடன் பேசியுள்ளார் விஷ்ணு பிரியா. கடைசியாக மகேஸ்வரி எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். இவை செல்போனில் ஆதாரங்களாக சிக்கியுள்ளன.
ஆயிரக்கணக்கான கேள்விகள்
சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கறிஞர் மோனிக் மாளவியாவிற்கு சம்மன் அனுப்பினர் இதனை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விஷ்ணுபிரியா மரணம் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காதலன் இல்லை
சி.பி.சி.ஐ.டியின் விசாரணை போக்கு சரியில்லை என குற்றம் சாட்டிய மாளவியா, காதல்தான் தற்கொலைக்கு காரணம் எனக்கூறி வழக்கை முடிக்க தீவிரம காட்டி வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
வக்கீல் விஷம் குடித்தார்
சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரை சார்வேயர் காலனியில் உள்ள தமது இல்லத்தில் மாளவியா விஷம் குடித்தார். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தம்மை தொடர்ந்து துன்புறுத்துவதாக வக்கீல் மாளவியா புகார் தெரிவித்துள்ளார். காதல் தோல்வியால் டி.எஸ்.பி. தற்கொலை என கூறுமாறு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். விஷம் குடித்த வழக்கறிஞர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.