தமிழக சட்டசபைத் தேர்தல்... இதுவரை ரூ. 23.66 கோடி பணம் பறிமுதல்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் நடத்தப்பட்டு வரும் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் இதுவரை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.23.66 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 23.66 கோடி இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் நடைமுறைகளையொட்டி மாவட்டங்களில் தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை மொத்தம் 23 கோடியே 66 லட்சம் ரூபாய் ரொக்கமும், வேலூர் மாவட்டத்தில் 78 அரிசி மூட்டைகள், திருவண்ணாமலையில் 52 அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி ஆரத்தி எடுத்தவர்கள், அனுமதியின்றி பேனர் கட்டியது, சுவர்களில் கட்சி விளம்பரம் செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 புளியோதரை பார்சல்கள் பறிமுதல்
இதற்கிடையே, அருப்புக்கோட்டையில ஜெயலலிதா பிரசாரத்திற்கு கூட்டம் சேர்க்க எட்டயபுரத்திற்கு அழைத்து செல்லப்பட்ட தொண்டர்களுக்கு வழங்க தயார் செய்த புளியோரதை பார்சல்களை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அருப்புகோட்டையில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். இதன் பொருட்டு கூட்டம் சேர்ப்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திலிருந்து அதிமுக தொண்டர்கள் வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக தேர்தல் விதிமுறைகளை மீறி ஒரு மண்டபத்தில் பிரியாணி தயாரிப்பதாக விளாத்திகுளம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் பறந்தது.
இதையடுத்து பறக்கும் படை அதிகாரி முத்து உள்ளிட்ட அதிகாரிகள் அந்த திருமண மண்டபத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு சுமார் 800 பேருக்கு புளியோரதை தயார் செய்து பொட்டலம் போட்டு கொண்டிருந்தனர். புளியோதரையை பறிமுதல் செய்த போலீசார் சமையல்காரர் மற்றும் திருணம மண்டப உரிமையாளர்களிடம் விசாரித்தனர். எட்டயபுரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க புளியோதரை தயார் செய்வதாக அவர்கள் கூறினர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோயில் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் அன்னதானம் வழங்குவதாக இருந்தால் கோயில் வாளகத்தில் தான் தயார் செய்வோம். திருமண மண்டபத்தில் தயார் செய்ய மாட்டோம். எங்களுக்கும், அந்த திருமண மண்டப உணவுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணையில் எட்டயபுரம் அருகே குமரரெட்டியாபுரம் பகுதியை சேர்ந்த அதிமுக ஊராட்சி செயலர் ஜெயராமன் மகன் சரவணன் ஏற்பாட்டில் அருப்புக்கோட்டையில் ஜெயலலிதா பிரசாரத்திற்கு செல்லும் அதிமுக தொண்டர்களுக்கு வழங்க தயார் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பறக்கும்படை அதிகாரி முத்து எட்டயபுரம் போலீசில் புகார் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட புளியோதரை எட்டயபுரத்தில் உள்ள டிரம் டிரஸ்ட் முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications