அதிமுக பொதுச்செயலராக சசிகலா நீடிப்பாரா? இரட்டை இலை சின்னம் யாருக்கு? திங்களன்று 'க்ளைமாக்ஸ்'
அதிமுக பொதுச்செயலர் பதவியில் சசிகலா நீடிப்பாரா? இரட்டை இலை சின்னம் யாருக்கு என திங்கள்கிழமையன்று தேர்தல் ஆணையம் முடிவை தெரிவிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா நீடிப்பாரா? இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என வரும் திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் தீர்ப்பளிக்கலாம் என அதிமுக ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்தும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியும் ஓபிஎஸ் அதிமுகவினர் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் விளக்கங்களை கேட்டுப் பெற்றுள்ளது.
புதிய மனு
இரு தரப்பினரும் தங்களது விளக்கங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே இன்றும் ஓபிஎஸ் அதிமுக தரப்பினர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தங்களது அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ஒரு புதிய மனுவை கொடுத்துள்ளார்.
24-ல் சின்னம் ஒதுக்கீடு
ஆர்கே நகர் தொகுதியில் வரும் 24-ந் தேதி வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆகையால் 24-ந் தேதிக்கு முன்னரே தேர்தல் ஆணையம் தீர்ப்பளிக்கலாம் என இரு அணிகளுமே எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தீவிர லாபி
அதிமுக கட்சி விதிகளின்படி சசிகலாவின் நியமனம் செல்லாதுதான்; ஆனால் தேர்தல் ஆணையத்திடம் சாதகமான முடிவுகளைப் பெறுவதற்காக அனைத்துவிதமான லாபிகளையும் சசிகலா தரப்பு மேற்கொண்டு வருகிறது.
திங்களன்று தீர்ப்பு?
இந்நிலையில் இவ்விவகாரத்தில் வரும் திங்கள்கிழமையன்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளிக்கலாம் என எதிர்பார்ப்பதாக அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார். சசிகலா நியமனம் செல்லாது என அறிவித்துவிட்டால் தினகரனை துணைப் பொதுச்செயலராக்கியதும் செல்லாது என்றாகிவிடும்.
என்ன நடக்கும்?
ஆர்.கே. நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணிக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். சசிகலா அணி வேட்பாளர் தினகரன் சுயேட்சை வேட்பாளராகவே கருதப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.