சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மீது போலீசில் தேர்தல் அதிகாரிகள் புகார்
சென்னை: மத்திய சென்னை தொகுதியில் மேயர் சைதை துரைசாமி தலையில் நடந்த பெயர் சூட்டு விழாவில், பண பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, போலீசில் தேர்தல் அதிகாரிகள் புகார் செய்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில், அதிமுக பிரமுகர் ராமன் என்பவரது பேத்திக்கு பெயர் சூட்டுவிழா நடந்தது. இதற்காக அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆனால் மைதானத்துக்கு வெளியே புத்தகத்திருவிழா என்று போர்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவிற்காக தேர்தல் அதிகாரிகளிடமோ, போலீசாரிடமோ முன்அனுமதி பெறவில்லை.
சென்னை மேயர் சைதை துரைசாமி, அமைச்சர் அப்துல் ரஹீம், அதிமுக எம்எல்ஏ கோகுல இந்திரா, வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் மேடை போட்டு பிரசாரம் நடப்பதாகவும், பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் தகவல் வெளியானது.
இதனையடுத்து, அங்கு ஏராளமாக திமுகவினர் கூடினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுகுநித்து திமுகவினர் வீடியோ மற்றும் போட்டோ ஆதாரத்துடன் மத்திய சென்னை உதவி தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தனர்.
ஆனால் சம்பவ இடத்துக்கு வந்த தேர்தல் அதிகாரி மேயரைப் பார்த்து பயந்து, அங்கிருந்து நைசாக நழுவிச் சென்று விட்டார். தனது செல்போன் இணைப்பையும் அவர் துண்டித்து விட்டார். இதனையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரிடம் திமுகவினர் போனில் புகார் அளித்தனர்.
பிரவீன் குமார் உத்தரவின் பேரில் ஒய்.எம்.சி.ஏ மைதானம் வந்த தேர்தல் அதிகாரி கருப்பசாமி தலைமையிலான அதிகாரிகள், விழாவை வீடியோ பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து , முன் அனுமதி பெறாமல் அதிமுகவினர் விழா நடத்தியதாக அண்ணாசாலை போலீசில் அதிகாரிகள் புகார் செய்தனர்.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது