தேவர் சிலைக்கு ஜெ. கொடுத்த தங்க கவசத்தையும் தேர்தல் ஆணையமே வச்சுக்குமோ?
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கான தங்க கவசத்தை அதிமுகவினரிடம் ஒப்படைக்க பேங்க் ஆப் இந்தியா மறுத்துள்ளது.
சென்னை: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த தங்க கவசம் யாருக்கு சொந்தம், அதிமுகவை முடக்கியது போல இந்த கவசத்தையும் தேர்தல் ஆணையமே வைத்துக் கொள்ளுமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் 2014-ம் ஆண்டு ஜெயலலிதா தங்க கவசம் அணிவித்தார். இந்த தங்க கவசம் தற்போது பேங்க் ஆப் இந்தியாவின் பாதுகாப்பில் உள்ளது.
இந்த ஆண்டு வரும் 30-ந் தேதி தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி தேவர் சிலைக்கு அணிவிக்க தங்க கவசத்தை பெறுவதற்கு பேங்க் ஆப் இந்தியாவுக்கு அதிமுகவினர் சென்றுள்ளனர்.
ஆனால் வங்கி அதிகாரிகளோ, அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் எந்த அணியிடமும் ஜெயலலிதா அணிவித்த தங்க கவசத்தை தர இயலாது என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் தொடர்ந்து வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுக கட்சி பெயர், இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. இதனடிப்படையில் ஜெயலலிதா கொடுத்த தங்க கவசத்தையும் கூட தேர்தல் ஆணையமே தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுமோ என்கிற சந்தேகத்தை சிலர் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.