ஆர்.கே.நகர் காலி... சொல்லிட்டோம்.. ஆணையம் தேதியை அறிவிக்கும்.. சக்சேனா
சென்னை: சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி காலியாக இருப்பதை தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம். அங்கு 6 மாதத்தில் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா விரைவில் மீண்டும் முதல்வராகவுள்ளார். இதற்காக முன்னேற்பாடாக சில செயல்கள் நடந்து வருகின்றன. பதவியேற்பு தொடர்பான விஷயங்கள் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில், மறுபக்கம் அவர் எம்.எல்.ஏ ஆவதற்காக தொகுதியைக் காலி செய்து ரெடியாகியுள்ளனர். ஜெயலலிதாவுக்காக சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதத்தை மின்னல் வேகத்தில் ஏற்றார் சபாநாயகர் தனபால். அதே மின்னல் வேகத்தில் இதுபற்றிய அறிவிப்பும் அரசு கெசட்டில் வெளியிடப்பட்டு விட்டது. மேலும் தொகுதி காலியாக இருப்பதாகவும், தேர்தல் நடத்துமாறும் தேர்தல் ஆணையத்துக்கும் சட்டசபையிலிருந்து தகவல் போய் விட்டதாகவும் சொல்கிறார்கள்.
இதையடுத்து தற்போது தேர்தல் ஆணையத்தின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் இடைத் தேர்தல் வருமா என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் ராஜினாமா செய்தது பற்றிய முறையான அறிவிப்பு கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டசபை செயலகத்தில் இருந்து இந்திய தேர்தல் கமிஷனுக்கு இதுபற்றி தகவல் அனுப்பி இருப்பார்கள் என்று கருதுகிறேன். தேர்தல் அதிகாரி என்ற முறையில் நானும் ஆர்.கே.நகர் தொகுதி காலியான இடம் என்று இந்திய தேர்தல் கமிஷனுக்கு இன்று தகவல் அனுப்புகிறேன்.
ஒரு தொகுதியில் காலி இடம் ஏற்பட்டால் 6 மாதத்தில் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஆர்.கே.நகர் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெறும் தேதியை மத்திய தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications