இன்னும் 30 நாட்கள்..தினகரன் மீதான வழக்குகளை முடித்து சிறைக்கு அனுப்ப அமலாக்கப் பிரிவு மும்முரம்!
டிடிவி தினகரன் மீதான வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை பெற்றுத் தருவதில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மும்முரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: தினகரன் மீதான ஃபெரா உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் 30 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்பதில் அமலாக்கப் பிரிவு தீவிரம் காட்டி வருகிறது. இந்த வழக்குகள் முடிவடையும் நிலையில் தினகரனுக்கு சிறை தண்டனை உறுதி என்கின்றன அமலாக்கத்துறை வட்டாரங்கள்.
அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலர் தினகரன் மீதான ஃபெரா வழக்குகள் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ரிம்சாட், சுபிக்பே, அப்பூப்ஸ் ஆகிய கம்பெனிகளுக்கு அமெரிக்க டாலர்களை சட்டவிரோதமாக மாற்றியது தொடர்பான அமலாக்கத்துறை வழக்கும் நிலுவையில் உள்ளன.
நிலுவையில் அப்பீல்
அதேபோல் ஜெயா டிவிக்கு அப்லிங் கருவிகளை இறக்குமதி செய்ததில் அன்னிய செலாவணி மோசடி நடந்ததாக சசிகலா, தினகரன் மீது அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சசிகலா, தினகரனை விடுதலை செய்த தீர்ப்புக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
விரைவாக முடிக்க திட்டம்
அத்துடன் ஜெயலலிதா லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் தினகரன் மீதான அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாம்.
30 நாட்கள்
அதுவும் அடுத்த 30 நாட்களுக்குள் தினகரன் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாம். பெரா வழக்குகளில் தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம் விதித்ததை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது.
தேர்தலில் போட்டியிட தடை
தினகரன் மீதான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வரும் நிலையில் நிச்சயம் தினகரன் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். இதன்மூலம் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத ஒரு நிலை உருவாகும் என்கின்றன அமலாக்கத்துறை வட்டாரங்கள்.