ஓ.பி.எஸ்ஸுக்கு 6 மாத அவகாசம் கூட தராத அரசு... முதல்வராக இருந்தவருக்கே இந்த கதியா?
கிரீன்வேஸ் சாலையில் ஓபிஎஸ் குடியிருந்து வந்த அரசு இல்லத்தை கடும் நெருக்கடிக்கு இடையே காலி செய்து உள்ளார் ஓபிஎஸ். ஆறுமாதம் வட அவகாசம் தராமல் விரட்டியுள்ளதுஎடப்பாடி பழனிச்சாமி அரசு.
சென்னை: ராசியான அரசு வீட்டில் பல ஆண்டுகாலமாக குடியிருந்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று முதல் புது வீட்டில் குடியேறியுள்ளார். அவரது புது முகவரி இனி ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி. ஆறு மாத அவகாசம் கூட தராமல் அரசு நெருக்கடி கொடுத்ததை அடுத்தே உடனடியாக அவர் தென்பெண்ணை வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு குடியேறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தனது பதவியே ராஜினாமா செய்தார். காபாந்து முதல்வராக இருந்தார். சசிகலாவிற்கு எதிரான நிலைப்பாட்டினால் அதிமுக இரு அணியாக பிரிந்தது. இதனையடுத்து சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி கடந்த 16ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார்.
இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு அரசு அளித்த சலுகைகள் பறிக்கப்பட்டன. அவரது காரில் இருந்த சுழல் விளக்கு அரசு லட்சிணை எடுக்கப்பட்டது. அமைச்சர் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது எம்எல்ஏவாக மட்டுமே இருக்கிறார். எனவே அவர் வசித்து வந்த அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பட்டது.
வீட்டை காலி செய்ய நோட்டீஸ்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு மக்களிடம் செல்லப்போவதாக கூறவே ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடி அதிகரித்தது. வீட்டை காலி செய்யச் சொல்லி தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ச்சியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கடும் நெருக்கடி
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கூட வீட்டை காலி செய்யச் சொல்லி கருணாநிதி கூட இவ்வளவு நெருக்கடிகள் தரவில்லை. ஆனால் கடந்த மாதம் வரை முதல்வராக இருந்த தனக்கு ஆளும் அதிமுக அரசு நெருக்கடி தருகிறது என்று வருத்தத்துடன் தனது சகாக்களிடம் பகிர்ந்து கொண்டாராம்.
அமைதிக்கு பங்கமாம்
ஓபிஎஸ் வீட்டிற்கு கடந்த ஒரு மாதகாலமாகவே அதிக ஆட்கள் வருகிறார்கள். இவரது வீட்டிற்கு அருகில் அமைச்சர்கள். உயர் நீதி மன்ற நீதிபதிகள் என்று பெரும்பாலான வி.ஐ.பிகள் வசிக்கின்றனர். எனவே அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது என்றும் நெருக்கடியாக இருக்கிறது என்று அவரது வீட்டை காலி செய்யச் சொல்லியிருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு.
தென்பெண்ணை இல்லம்
பன்னீர் செல்வம் முதல் முறையாக பொதுப்பணித்துறை அமைச்சர்,முதல்வர் என ஆனதில் இருந்து கிரீன் வேஸ் சாலையில் உள்ள தென் பண்ணை இல்லத்தில் குடியிருந்து வருகிறார். பல ஆண்டுகளாக ஒரே இல்லத்தில் குடியிருந்து வரும் அளவிற்கு இது ராசியான வீடாக இருக்கிறது. எனவேதான் முதல்வரான போது கூட இந்த வீட்டை மாற்றவில்லை.
காய்கறி தோட்டம், மாடுகள்
ஓபிஎஸ் வீட்டில் தக்காளி,கீரை,முருங்கை, நாட்டுக்கத்தரி, மா, இளநீர் ஒட்டு ரக தென்னை, எலுமிச்சை என்று பசுமை தோட்டமே இருந்தது. அதை பராமரிக்க ஒருவரை நியமித்து இருந்தார். அதே போல இரண்டு நாட்டு பசுமாடுகளையும், காளைமாடுகளையும் வளர்த்து வந்தார். இவற்றை பராமரிக்க தனி ஆட்கள் இருந்தாலும் ஓபிஎஸ் தனி கவனம் செலுத்துவாராம். இப்போது தான் பார்த்து பார்த்து வளர்த்த காய்கறி தோட்டங்களை விட்டு வேறு வீட்டிற்கு குடியேறியுள்ளார்.
வீனஸ் காலனி
இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளை பார்த்த ஓபிஎஸ்க்கு ஆழ்வார் பேட்டையில் உள்ள வீனஸ்காலனி வீடுதான் பிடித்திருந்தது. காளை, பசுக்களை வளர்க்கவும், காய்கறி தோட்டம் போடவும் கிரின்வேஸ் சாலை இல்லத்தைப் போல ஆழ்வார்பேட்டை வீடும் அழகாக அமைந்து விட்டதாம். ஓபிஎஸ் முகவரி கிரீன்வேஸ் சாலையில் இருந்து வீனஸ் காலனிக்கு மாறியுள்ளது. இனி புது வீடு ராசி ஓபிஎஸ்க்கு எப்படியிருக்கிறது பார்க்கலாம்.