வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு- ஜெ., சசி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு
சென்னை: வருமான வரித்துறையினரின் கணக்குத் தாக்கல் செய்யாத வழக்கில் நேரில் ஆஜராவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு விலக்களித்து உத்தரவிட்டுள்ளது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழியான சசிகலா ஆகியோர் கடந்த 1992-1993 மற்றும் 1993-1994 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கினை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அவர்கள் மீது வருமான வரித்துறை வழக்கு ஒன்றினை தொடுத்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணையானது சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இவ்வழக்கானது நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "இந்த வழக்கில் சமரச மனுவின் மீது நவம்பர் 28 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்காரணமாக இவ்வழக்கு விசாரணையை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்.மேலும், ஜெயலலிதா மற்றும் சசிகலா நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதா மற்றும் சசிகலா வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.