ஏன் கார்த்தி, பேசாம ஆம் ஆத்மில சேர்ந்து கெஜ்ரிவாலா மாறிடலாம்ல... ஈவிகேஎஸ் பதிலடி!
சென்னை: கார்த்தி சிதம்பரத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர் வேண்டும் என விரும்பினால் அவர் ஏன் ஆம் ஆத்மியில் சேரக்கூடாது என வினா எழுப்பியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
சமீபகாலமாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்திற்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கட்சியில் இருந்து விலகியது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இளங்கோவன், ‘இதே போல் கட்சியில் உள்ள அப்பா, மகன் இருவரும் வெளியேறினால் கட்சிக்கு மிகவும் நல்லது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தார் சிதம்பரம். காங்கிரஸ் தலைவர் சோனியாவும் இளங்கோவனை போனில் அழைத்து கண்டித்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைத்தது. காங்கிரஸிற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் டெல்லி தேர்தல் முடிவுகள் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் அவர், ‘தமிழக காங்கிரஸ் ஆம்ஆத்மியிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்துள்ள பதிலில், ‘கார்த்தி சிதம்பரம் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர் வேண்டும் என்று விரும்பினால் அவர் ஏன் ஆம்ஆத்மியில் சேரக் கூடாது' எனத் தெரிவித்துள்ளார்.