காஞ்சிபுரம் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனை: ரூ. 3 லட்சம் பறிமுதல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திமுக நிர்வாகி இல்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல அரசியல் கட்சியினர் வீடுகளில் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் முன்னாள் திமுக மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் கோதண்டராமன். இவரது வீட்டில் தேர்தல் பட்டுவாடாவிற்காக பணம் பதுக்கி வைத்து இருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் உடனடியாக அங்கு சோதனை மேற்கொண்ட தேர்தல் அதிகாரிகள் கணக்கில் வராத 3 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். பின்னர் அந்த பணம் மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அன்னூரில்...
அவினாசி தொகுதிற்குட்பட்ட அன்னூரில் திமுக பேரூர் கழக அவைத்தலைவர் சண்முகம் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அவினாசி தொகுதி செலவின பார்வையாளர் ஓம் பிரகாஷ் பட்டேல் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள்,மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அவருக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் நட்த்தப்பட்ட சோதனையில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதனை தொடர்ந்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்