ஈபிஎஸ் அணிக்கு ஆதரவு தர ஆளுக்கு ரூ. 20 கோடி பேரம் பேசுறாங்க - செந்தில்பாலாஜி புகார்
ஈபிஎஸ் அணிக்கு ஆதரவு தர தலா 20 கோடி ரூபாய் பேரம் பேசியதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video

குடகு: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தமிழக போலீஸ் மிரட்டுவதாகவும், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவு தர ஒரு எம்எல்ஏவிற்கு தலா ரூ. 20 கோடி வரை பேரம் பேசுவதாகவும் செந்தில் பாலாஜி எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உள்ள எம்எல்ஏக்கள் குடகில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறது திமுக.
எடப்பாடி தரப்புக்கு மேலும் நெருக்கடி தரும் வகையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

குடகு ரிசார்ட்டில் போலீஸ்
திடீரென தமிழக போலீசார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் கர்நாடகாவின் குடகு ரிசார்ட்டுக்கு நேற்று சென்றனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்காவிட்டால் வழக்கு பாயும் என மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் பழனியப்பனை கைது செய்ய தேடிச்சென்றுள்ளனர் போலீசார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வன் ஆகியோர் போலீசாரின் இந்த மிரட்டலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

சைலண்ட் ஆன எம்எல்ஏக்கள்
புதுச்சேரியில் இருந்தவரை செய்தியாளர்களை கூப்பிட்டு பேட்டி கொடுத்த எம்எல்ஏக்கள், குடகுக்கு சென்று 6 நாட்களாக யாரையும் சந்திக்கவில்லை. செல்போன் மூலமும் பேசவில்லை. யாருக்கும் பேட்டியும் தரவில்லை.

ரூ. 20 கோடி பேரம்
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக காவல்துறையினர் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தருவதற்கு ரூ. 20 கோடி பேரம் பேசப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

குடகு போலீசில் புகார்
தமிழக போலீசாரின் மிரட்டலை அடுத்து கர்நாடகா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாறுவதற்காகவும், ஆதரவு தரவேண்டும் என்பதற்காகவும் ரூபாய் 10 கோடி பேரம் பேசியதாக எம்எல்ஏ சண்முகநாதன் குற்றம் சாட்டினார். இப்போது செந்தில் பாலாஜி ரூ.20 கோடி புகார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications