இயற்கையைப்போல அனைவருக்கும் சமத்துவ பார்வை வேண்டும்... திருமா விருப்பம்
சென்னை: இயற்கையைப் போல அனைவருக்கும் சமத்துவப் பார்வை இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கவிஞர் மேத்தா தலைமையில் கவியரங்கம் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், தகடூர் தமிழ் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி உள்பட பலர் கலந்த கொண்டனர். கவிஞர் கபிலன் வரவேற்பு கவிதை படித்தார். அவரைத் தொடர்ந்து இயற்கையின் பார்வையில் இன விடுதலை என்ற தலைப்பில் திரைப்பட படாலாசிரியர்கள் விவேகா, யுகபாரதி, இளைய கம்பன், அண்ணாமலை, நந்தலாலா ஆகியோர் கவிதை பாடினார்கள். முடிவில் வன்னிஅரசு நன்றி கூறினார்.
இந்த விழாவில் தொல். திருமாவளவன் ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
சமத்துவப் பார்வை...
இயற்கையின் பார்வை சமத்துவ பார்வையே... சமத்துவ பார்வை இல்லாமல் இன விடுதலையை வென்றெடுக்க முடியாது.
ஜனநாயகப் புரிதல்...
ஜனநாயகத்தை புரிந்து கொள்ள முடியாது. ஜாதியை ஒழிக்க முடியாது. எனவே அனைவருக்கும் சமத்துவ பார்வை வேண்டும். சமத்துவ பார்வை பெறுவதற்கு ஜனநாயக புரிதல் வேண்டும்.
ஜாதி ஒழிப்பே விடுதலை...
அந்த அடிப்படையில் தான் விடுதலை சிறுத்தைகள் ஜாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று முழங்கி வருகிறது. அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களின் சமத்துவ பார்வை அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும்.
இயற்கையின் பார்வை...
அந்த தலைவர்களின் பார்வையும் இயற்கையின் பார்வையும் ஒன்று. இயற்கை ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்று பார்ப்பது இல்லை. உயர்வு, தாழ்வு பார்ப்பது இல்லை. ஒரு சார்பு நிலை எடுப்பது இல்லை.
ஜனநாயகம் காப்போம்...
நீர் எப்போதும் பள்ளத்தை நோக்கி பாய்வதற்கு காரணம், பள்ளத்தையிட்டு நிரப்பினால் தான் சமப்படுத்த முடியும் என்பதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகத் தான். இயற்கையில் இருந்தே சமத்துவ பார்வையை பெறுவோம். சாதியை ஒழிப்போம், ஜனநாயகத்தை காப்போம்' என இவ்வாறு திருமாவளவன் தனது உரையில் தெரிவித்தார்.