குற்றவாளி ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் சந்திக்கலாமா?- இளங்கோவன் கேள்வி
சென்னை: வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் ஒருவர் சந்திக்கலாமா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் பதவியை தானாகவே இழந்தார். தற்பொழுது ஜாமீனில் உள்ள அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.

இதனிடையே ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியை நிதி அமைச்சர் சந்திக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவை அருண்ஜெட்லி சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்று கூறிய அவர், காங்கிரஸ் கொண்டு வந்தபோது எதிர்த்த காப்பீட்டு மசோதாவை இப்போது அ.தி.மு.க ஆதரிப்பது ஏன் என்றும் வினா எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications