கான்டிராக்டர் சுப்பிரமணியன் மரண வழக்கில் எம்எல்ஏ பழனியப்பன் கைது செய்யப்படவில்லை: தினகரன் விளக்கம்
கான்டிராக்டர் சுப்பிரமணியன் மரண வழக்கில் எம்.எல்.ஏ. பழனியப்பன் கைது செய்யப்படவில்லை என டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: நாமக்கல் அரசு கான்டிராக்டர் சுப்பிரமணியம் மர்ம மரண வழக்கில் எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது; அவர் கைது செய்யப்படவில்லை என டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
நாமக்கல் சுப்பிரமணியம் மர்ம மரண வழக்கில் ஏற்கனவே ஒரு முறை விசாரணைக்கு ஆஜராகியிருந்தார் பழனியப்பன். இதையடுத்து மீண்டும் விசாரணைக்கு ஆஜராக பழனியப்பனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில்தான் கர்நாடகாவின் கூர்க் ரிசார்ட்டில் தங்கியிருந்த பழனியப்பனிடம் நேற்று தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பழனியப்பன் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூவமற்ற ஒரு தகவல் பரவியது.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பழனியப்பன் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி தவறானது. அவர் கூர்க் ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டுவிட்டார். எங்களுக்கு அவர் நீதிமன்றத்தை நாடியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தவறான தகவல்களை போட வேண்டாம் என்றார்.