துறையூரில் மீண்டும் வெடிவிபத்து வதந்தி... நடுரோட்டுக்கு வந்த 50 கிராமத்து மக்கள்
துறையூரில் மீண்டும் வெடிவிபத்து ஏற்படும் என்ற வதந்தியால் 50க்கு மேற்பட்ட கிராமத்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
திருச்சி: துறையூரரில் வெடிவிபத்து ஏற்பட்ட 19 பேர் பலியானதைப் போன்று மீண்டும் ஒரு வெடிவிபத்து அந்தப் பகுதியில் நடக்கும் என்று வதந்தி அப்பகுதியில் பரவியது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி விடிய விடிய சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
துறையூர் தா.முருங்கப்பட்டியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 1ம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் 19 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அந்த அச்சத்தில் இருந்தே இன்னும் மீளாத அப்பகுதி மக்களிடையே மீண்டும் அதே போன்று ஒரு வெடிவிபத்து ஏற்படப் போகிறது என்ற வதந்தி பரவியது. மேலும், வீட்டில் இருக்கும் சிலிண்டர்கள் வெடித்து சிதறி விடும் என்றும் தகவல் பரவியது.
இதனால் பீதியடைந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீட்டில் இருந்து சிலிண்டர்களுடன் வெளியேறி தெருக்குகளில் தஞ்சம் அடைந்தனர். விடிய வி்டிய தூங்காமல் தெருக்களிலேயே காத்திருந்தனர். விடிந்த பின்னர்தான் அது வதந்தி என்பது மக்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து மக்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். வதந்தி பரப்பியோர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.