சென்னை குண்டு வெடிப்பு - வெடிபொருள் நெல்லையில் இருந்து சென்றதா?
நெல்லை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுக்கான வெடிபொருள், நெல்லையில் இருந்து சப்ளை செய்யப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 1ம் தேதி பெங்களுரில் இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த ஸ்வாதி என்ற பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் பலியானார். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடித்த ரயிலில் போலீசார் நடத்திய விசாரணையில் அமோனியம் நைட்ரேட், பால்ரஸ் குண்டுகள், ஆணி மூலம் குண்டுகள் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.
குண்டு வெடிப்பின் பின்னனி குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூர் குண்டு வெடிப்பு சமபவத்திலும் இதே போன்று தான் தடயங்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த ஜூலை 27ம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனையில் 18 கிலோ நவீன ரக வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் இவை பெங்களூரில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த குணடுவெடிப்பில் பயன்படுத்தியதில் எஞ்சியவை என்பது தெரிய வந்தது. இந்த வெடிமருந்துகளை நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கல்குவாரியில் இருந்து வாங்கியுள்ளனர்.
இதையடுத்து வெடிமருந்தை சப்ளை செய்ததாக வீரவநல்லூரை சேர்ந்த பிரகாஷ் கல்லிடைக்குறிச்சி ஜான் ஆசிர், மற்றும் பதுக்கி வைத்திருந்த கிச்சான் புகாரி, அவருக்கு உதவியாக செயல்பட்ட பறவை பாதுஷா, அன்வர்பிஸ்மி, முகமது சம்சுதீன் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிடிபட்டது போக மேலும் 50 கிலோ வெடிமருந்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் அப்போதே செய்தி கசிந்தது. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட அமோனியம் நைட்ரேட் தென்மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர். இதில் யார், யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் நெல்லையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.