ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய ஐடி ரெய்டு ஏன்? எப்படி சிக்கினர் இத்தனை பேரும் தெரியுமா?
Recommended Video
சென்னை: சசிகலாவுடனும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் தொடர்புள்ள சுமார் 190 இடங்களில் வருமான வரித்துறை நேற்று முதல் தொடர் ரெய்டுகளை நடத்தி வருகிறது.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக செயல்படாத போலி நிறுவனங்கள் குறித்த கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டது.
2016ல், மத்திய அரசின் கம்பெனி விவகாரத் துறை அமைச்சக இணையதளத்தில், போலி நிறுவனங்கள் மற்றும் அதனுடைய இயக்குனர்களை அடையாளம் கண்டு பட்டியலிட்டு உள்ளனர்.
இதில், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டு, அவை எந்தச் செயல்பாடுகளும் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.
சசிகலா, இளவரசி சிக்கினர்
அந்த பட்டியலில், சசிகலா மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு சொந்தமான, 16 நிறுவனங்கள் உள்ளன. இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூடிக்கல்ஸ் நிறுவனத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் இயக்குநர்களாக இருந்தது தெரியவந்துள்ளது.
இயக்குநராக முடியாது
இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் அதே நிறுவனத்திலோ அல்லது வேறு எந்த நிறுவனத்திலோ 5 ஆண்டுகளுக்கு இயக்குநர் உள்பட எந்த பொறுப்பும் வகிக்க முடியாது என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
போலி கணக்கு
போலி நிறுவனங்கள், எந்தவித வர்த்தகமும் இல்லாமல், பல கோடி ரூபாய் லாபம் காட்டி, வரவு - செலவு அறிக்கை சமர்ப்பித்து உள்ளன. இத்தனை ஆண்டுகளாக இது கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் பண மதிப்பிழப்பு உத்தரவுக்கு பிறகு கருப்பு பணத்தை ஒழிக்க வருமான வரித்துறைக்கு கடும் உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்த நிலையில், அதன் விளைவாக இந்த விவகாரங்கள் அம்பலமாகியுள்ளன.
பல மாத வேலை
விசாரணை நடத்தியபோது, போலி நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்து கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி இந்தப் பணத்தைக் கொண்டு புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக்கலாம் என வருமான வரித் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. அந்நிறுவனங்களை பயன்படுத்தி, நடத்தப்பட்ட முறைகேடுகளுக்கான, ஆதாரங்களை திரட்டும் வேலை கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்துள்ளது.
விவரம் வெளியாக தாமதம்
இளவரசியின் மகனான விவேக் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களிலும் நேற்று முதல் ரெய்டு நடத்தப்பட்டது. போலி நிறுவனங்கள் குறித்த அனைத்து ஆதாரங்களையும் திரட்டிய பிறகே இப்போது இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போலி நிறுவனங்கள் மூலம் கிடைத்த பயன்கள், இப்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் என அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட்ட பிறகே முழுமையான விவரங்கள் தெரிய வரும் என்றும், இதற்கு சில காலம் பிடிக்கலாம் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.