நெல்லை அருகே.. போலி ஆவணம் தயாரித்து அரசு நிலத்தையே ஆட்டைய போட முயன்ற பலே புரோக்கர் கைது!
நெல்லை: பல லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய நினைத்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே வெங்கட்ரெங்காபுரத்தில் பல லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் உள்ளது. இந்த நிலம் ஆதி திராவிடர் காலனிக்காக ஓதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வள்ளியூர் அருகே பணகுடியை சேர்ந்த பிலவேந்திரன் இந்த நிலத்தை அபகரிக்க திட்டமிட்டார்.
இந்த நிலத்தை பத்திர பதிவு செய்ய பிலவேந்திரன் முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மாலை சேரன்மகாதேவி பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அந்த நிலத்தை தனது பெயருக்கு பதிவு செய்ய முயன்றார். அவர் கொடுத்த ஆவணத்தை சரி பார்த்த வருவாய் துறை ஊழியர்கள் அது போலியானதாக இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து மாவட்ட பதிவாளர் நாகராஜன் நெல்லை எஸ்பி விக்ரமனிடம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலாஜி நடத்திய விசாரணையில் போலி ஆவணம் மூலம் அரசு நிலத்தை அபகரிக்க முயன்றது தெரிய வந்தது. இது தொடர்பாக பெத்தாலியம்மாள் பிலவேந்திரன், சங்கரன்கோவிலை சேர்ந்த வக்கீல் ஜோதிமணி ஆகியோர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக பிலவேந்திரனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த பிலவேந்திரன் தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஏக்கர் நிலத்தை இது போல் போலியாக பத்திர பதிவு செய்து விற்பனை செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.