ஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதி இத்தனை வருடத்திற்கு பிறகு கைதான பின்னணி இதுதான்!
மதுரை: 2009ல் போடப்பட்ட ஒரு வழக்கில் வாய்தாவிற்கு ஆஜராகாததால் ஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதி கைது செய்யப்பட்டார் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு கக்கூஸ் ஆவணப் பட இயக்குனர் திவ்ய பாரதி, சட்டம் பயின்று கொண்டிருந்த போது, சக மாணவர் ரமேஷ் என்பவர் கல்லூரி வளாகத்திலேயே உயிரிழந்துள்ளார். பாம்பு கடித்ததால் மாணவர் ரமேஷ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அப்போது அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று திவ்ய பாரதி உள்ளிட்ட 7 சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரேத கிடங்கிற்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அரசு மருத்துவர்களை, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றச்சாட்டிற்காக திவ்யபாரதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நிபந்தனைகளின் படி திவ்யபாரதி தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். இரண்டு வாய்தாவிற்கு வராத நிலையில் அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து திவ்ய பாரதி இன்று கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் திவ்ய பாரதிக்கு பிணை மனு தாக்கல் செய்ததன் பேரில் ஜாமின் கிடைத்துள்ளது. ஒரு வாரம் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டம் முடித்த திவ்ய பாரதி இந்த வழக்கு காரணமாக வழக்கறிஞரைக பதிவு செய்ய முடியாத நிலை இருப்பதால் அவர் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.