கமலின் அரசியல் பேச்சு... ரஜினியின் ரசிகர்கள் சந்திப்பு - தமிழக அரசியலில் திருப்பம் வருமா?
கமல்ஹாசனின் அரசியல் பேச்சுக்கள், ரஜினிகாந்தின் ரசிகர்கள் சந்திப்பு பற்றிய அறிவிப்புகள் தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழக அரசியலில் தற்போது உள்ள வெற்றிடத்தை நிரப்ப கமலும், ரஜினியும் அரசியலுக்கு வருவார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் கமலின் அரசியல் பேச்சுக்கள், ரஜினி தனது ரசிகர்களை சந்திக்க அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியலில் புதிய நகர்வை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கு நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. அண்ணா தொடங்கி ஜெயலலிதா வரை சினிமா துறையில் இருந்து வந்தவர்களே தமிழகத்தை ஆண்டுள்ளனர். அண்ணாவும், கருணாநிதியும் சினிமாவில் கதை, திரைக்கதை எழுதியதோடு பேச்சாற்றலாம் தமிழக மக்களை கவர்ந்தவர்கள் என்றால் எம்.ஜி. ஆர் அவருக்குப் பின்னர் வந்த ஜெயலலிதா நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்கள்.
அண்ணாவின் மரணத்திற்குப் பிறகு கருணாநிதி தமிழக முதல்வரானார். திமுகவில் இருந்து விலகி அதிமுக தொடங்கிய எம்ஜிஆர் 10 ஆண்டுகாலம் தமிழகத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தார். எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகுதான் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரமுடிந்தது.
வைரவிழா நாயகன்
1957ல் எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்த கருணாநிதி இன்றைக்கும் எம்எல்ஏவாக 60 ஆண்டுகாலம் அசைக்க முடியாத சக்தியாக வைர விழா நாயகனாக திகழ்ந்து வருகிறார். மிக இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெருமைக்குரியவர். 5முறை முதல்வராகி தமிழகத்தை ஆண்டுள்ளார். உடல்நலக்குறைவு அவரை தற்போது அமைதியாக்கியுள்ளது.
ஜெயலலிதா
ஜெயலலிதாவின் வருகை தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 1991 முதல் 2016 டிசம்பர் வரை 25 ஆண்டு காலம் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தார் ஜெயலலிதா. இவரும் 40களில் முதல்வரானவர் 6முறை முதல்வரானவர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
விஜயகாந்த்
2005ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய விஜயகாந்த் 2006ல் எம்எல்ஏவானார். 2011ல் 29 எம்எல்ஏக்களுடன் வெற்றி பெற்று எதிர்கட்சித்தலைவர் வரிசையில் அமர்ந்தார். 2016 தேர்தலில் டெபாசிட் கூட அவரால் பெற முடியவில்லை. உடல் நலக்குறைவினால் அவரும் அமைதியாகிவிட்டார்.
அரசியலில் வெற்றிடம்
தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்திகளாக திகழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதாவிற்குப் பிறகு தற்போது மிகப்பெரிய வெற்றிடம் நிலவுகிறது. அவர்கள் இருவரைப்போல அரசியல் செய்ய இன்றைக்கு மிகப்பெரிய தலைவர்கள் இல்லை. இதனால் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல ஆள் ஆளுக்கு அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வர் கனவில் உலா வருகின்றனர்.
கமல்ஹாசன்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியலைப் பற்றி அதிகம் பேசுகிறார். திராவிடம் பற்றி பேசுகிறார். மோடியின் தூய்மை இந்தியா திட்ட தூதுவராக இருந்தாலும் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்தாலும் அவரது கருத்துக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார். அவரது டுவிட்டர் கருத்துக்கள் அவ்வப்போது பரபரப்பை பற்றவைக்கின்றன.
ரஜினியின் அழைப்பு
நடிகர் ரஜினிகாந்த் கடந்த தை திருநாளில் துக்ளக் விழாவில் பேசியது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தமிழக முதல்வரே என்ற பேனர் வைக்க காரணமானது. இலங்கை செல்ல விடாமல் அரசியல் கட்சியினர் தடுக்கவே அதற்கு அறிக்கை வெளியிட்டார். ஏப்ரல் 2ஆம் தேதி ரஜினியின் ரசிகர்கள் சந்தித்து பேச உள்ளனர். ஏப்ரல் 11 முதல் 16 வரை ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கப் போகிறார் ரஜினி.
சினிமாவிற்கான விளம்பரமா?
ரஜினிகாந்த் நடித்த புதுப்படம் வெளியாகும் போது அரசியல் பற்றி பரபரப்பு கிளம்புவதும் பின்னர் அமுங்கி போவதுமாக இருக்கும். அவரது வாய்ஸ் 1996க்குப் பிறகு எடுபடவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று இன்னமும் அவரது ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
அரசியலுக்கு அழைப்போம்
ரசிகர்களுடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து எதுவும் பேசப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைப்போம் என்று கூறுகின்றனர். அவர் எப்போது அரசியலுக்கு வந்தாலும் ஜெயிப்பார் என்கின்றனர் அவரது ரசிகர்கள். அதே நேரத்தில் இது விளம்பர ஸ்டண்ட் என்கின்றனர் பொதுமக்கள். தமிழக அரசியலுக்கு புதிய தலைவர் கிடைப்பாரா? மீண்டும் சினிமா நடிகரைத்தான் நம்பியிருக்கிறதா தமிழகம் என்பதே இப்போது மக்களிடம் உள்ள கேள்வி.