போலீஸ் மீது புகார் கூறிய விவசாயி.. அலேக்காக தூக்கிச் சென்ற காக்கிகள்!
வாங்காத பணத்தைத் தரச் சொல்லி வற்புறுத்தும் காவல்துறையினர் மீது நீதிமன்றத்தில் முறையிட வந்த விவசாயியை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை : மோசடியாக புகார் அளித்தவருக்கு பணம் தர வற்புறுத்திய காவல்துறையினர் மீது நீதிமன்றத்தில் மன்றாட வந்த விவசாயியை போலீசார் அலேக்காக தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் என்ற விவசாயி. இவர் ரூ. 8 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று அன்பு ரோஸ் என்பவரின் மனைவி காளியம்மாள் ஆலங்குளம் போலீசில் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் எஸ்ஐ உமா மகேஸ்வரியும், பயிற்சி எஸ்ஐ ராமசந்திரனும் விசாரணை நடத்தினர்.

அப்போது மாரியப்பன் தான் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார். ஆனால் எஸ்ஐக்கள் இருவரும் உடனே பணத்தை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் பெண் எஸ்ஐ மீதும், பயிற்சி எஸ்ஐ மீதும் தனி தனியாக புகார் கொடுத்தார்.
புகார் சம்பந்தமாக மாரியப்பனின் மனைவி மேரியும், அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்துவும் சாட்சியாக நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டது. இந்நிலையில் இரவில் போலீசார் மாரியப்பன் வீட்டுக்கு சென்று வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதையும் நீதிமன்றத்தில் மாரியப்பன் தெரிவித்தார். இதையடுத்து நடந்தவற்றை மனுவாக கொடுக்க நீதிபதி கூறியுள்ளார். அப்போது அங்கு வந்த பெண் எஸ்ஐ உமா மகேஸ்வரியும், பயிற்சி எஸ்ஐயும் மாரியப்பனை குண்டு கட்டமாக தூக்கி சென்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications