போக்குவரத்து ஊழியர்களை தொடர்ந்து பயிர் காப்பீடு கேட்டு விவசாயிகளும் போராட முடிவு
போக்குவரத்து ஊழியர்களை போல தீவிர போராட்டத்தில் குதிக்க நாகை மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
நாகை : நீண்ட நாட்களாக பயிர் காப்பீடு கேட்டும் அரசு அதற்கு செவி சாய்க்காததாலும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாலும் தீவிர போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆறு நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஏழாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்வதால் தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்த போராட்டத்தால் தமிழக அரசுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பலர் பயிர்காப்பீடு கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களை தொடர்ந்து விவசாயிகளும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
பல கிராமங்களில் கூட்டுறவு வங்கிகளின் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் துண்டு ஏந்தி பிச்சை எடுத்தும் , மண் சட்டி ஏந்தியும், அரை நிர்வாண போராட்டமும் நடத்தியும் விவசாயிகளின் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே வேதாரண்யம் தாசில்தார் விஜயகுமார் விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து உள்ளது. இதனையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி வருகிற 12-ந் தேதிக்குள் பயிர் காப்பீட்டு தொகை வழங்காவிட்டால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீட்டு முன்பு போராட்டம் நடத்த வேதாரண்யம் பகுதி விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications