மற்றொரு ஜிக்னேஷ் மேவானியாக உருவெடுக்கிறாரா பா.ரஞ்சித்?
பா.ரஞ்சித் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருப்பதன் மூலம் தலித் அரசியலை மைய நீரோட்ட அரசியலுக்கு நகர்ந்தியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் ராகுல் காந்தியை சந்தித்து பேரறிவாளன் விவகாரம் பற்றி பேசியிருப்பதன் மூலம் தன்னை தலித் அரசியலிலிருந்து மைய நீரோட்ட அரசியலுக்கு நகர்த்திக்கொண்டுள்ளாரா என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா துறையில் இதுவரை இல்லாத அளவில் தனித்துவமான அரசியல் குரலாக எழுந்து வந்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். தலித் அரசியலை தனது திரைப்படங்களின் மூலம் பேசி கவனத்தைப் பெற்றவர்.
தனது முதல் படமான அட்டக்கத்தியில் மென்மையாக தலித் பின்னணியில் கதையைச் சொன்ன இயக்குநர் பா.ரஞ்சித், மெட்ராஸ் படத்தில் வட சென்னை நகர தலித்துகளின் கதையை அழுத்தமாகச் சொல்லி கவனம் பெற்றார்.

கபாலி, காலா
அடுத்து தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும், ரஜினிகாந்த்தை வைத்து கபாலி, காலா ஆகிய திரைப்படங்களில் தலித் அரசியலை காத்திரமாகப் பேசி தனது தலித் அரசியலை தேசிய அளவில் உரத்து ஒலிக்கச் செய்தார். பா.ரஞ்சித் திரைப்படங்களில் தலித் அரசியல் பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல் நடைமுறையிலும் பின்பற்றுகிறார். அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் என்று சொன்னாலும் நடைமுறையில் நாம் சாதியாகவே பிரிந்து கிடக்கிறோம் என்று இயக்குநர் அமீருடன் வாக்குவாதம் செய்தார். அது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.

பா.ரஞ்சித்தின் தலித் அரசியல் செயல்பாடு
தமிழகத்தில் மட்டுமல்லாமல், தலித் அரசியலை பரந்த அளவில் விரிக்கும் நோக்கோடு குஜராத் மாநில தலித் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி எம்எல்ஏவை சந்தித்தார். மனிதர்களே மனிதக்கழிவை அகற்றும் தொழிலை ஒழிக்க நீலம் பண்பாட்டு மையம் மூலம் மஞ்சள் நாடகம் நடத்த ஏற்பாடு செய்தார். சிவகங்கையில் நடைபெற்ற சாதிய படுகொலைக்கு திரையுலகினரைத் திரட்டி கண்டனக் கூட்டம் நடத்தினார்.

வெளிப்படையான கருத்துக்கள்
சென்னை நகர தலித் இசையான கானாவுக்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். தலித் சாதிகளுக்கு இடையே ஏற்பட்ட சந்தையூர் சுவர் பிரச்சனை விவகாரத்தில் சுவரை இடிக்க வேண்டும் என்று கூறினார். இப்படி தொடர்ந்து தனது தலித் அரசியல் செயல்பாட்டை அமைத்துக்கொண்டவர் பா.ரஞ்சித்.

தலித் அரசியல் சினிமாக்கள்
தமிழ் சினிமாவில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைக் கதைக் களமாகக் கொண்ட படங்களுக்கு மட்டுமே மார்க்கெட் என்று இருந்த நிலையில் தமிழகத்தில் தலித் சினிமாவுக்கும் ஒரு மார்க்கெட் இருக்கிறது என்று ரஞ்சித் தனது படத்தின் வெற்றிகள் மூலம் நிரூபித்தார். ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில், தாராவியில் தமிழர்களின் நில உரிமையை பேசுவதன் மூலம் தலித் பஞ்சமி நில உரிமையைக் குறியீடாகப் பேசி பா.ரஞ்சித் தேசிய அளவில் கவனத்தை பெற்றிருந்தார்.

அரசியல் பேச்சு
இந்நிலையில்தான் இயக்குநர் பா.ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தித்துள்ளார். ராகுல் காந்தியும் ரஞ்சித்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து பேட்டியளித்துள்ள ரஞ்சித், ராகுல் காந்தியிட அரசியல் பற்றி விவாதித்ததாகவும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதில் ராகுல் காந்தி ஆட்சேபம் இல்லை என்று கூறியதாகத் தெரிவித்தார்.

மைய அரசியல் நீரோட்டம்
தமிழ் சினிமாவில் தீவிரமாக தலித் அரசியல் பேசிவரும் பா.ரஞ்சித், பேரறிவாளன் விவகாரம் குறித்து ராகுல் காந்தியிடம் பேசியிருப்பதன் மூலம், தலித் அரசியலையும் விட்டுவிடாமல் தன்னை மைய நீரோட்ட அரசியலையும் நோக்கி நகர்த்திக்கொண்டுள்ளார். தான் தலித் அரசியல் மட்டும் பேசுபவர் இல்லை, மைய நீரோட்ட அரசியலையும் பேசுபவர் என்று ராகுல் காந்தி சந்திப்பின் மூலம் காட்டியுளார் இயக்குநர் பா.ரஞ்சித். காலா திரைப்பட விழா ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், ரஞ்சித் வேறு கட்டத்திற்கு பயணிப்பார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications