இஸ்ரோ திட்ட இயக்குநர் வளர்மதிக்கு கலாம் விருது- 'அம்மா' உணவகத்துக்கும் 'அவார்டு'!!
சென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள அவர் பெயரிலான விருது இஸ்ரோ திட்ட இயக்குநர் விஞ்ஞானி வளர்மதிக்கு வழங்கப்பட்டது. சென்னையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா இந்த விருதை விஞ்ஞானி வளர்மதிக்கு வழங்கினார்.
நாட்டின் 69வது சுதந்திர தினம் உற்சாகத்துடன் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
முதல்வர் ஜெயலலிதா சுமார் 10 நிமிடம் மட்டுமே உரை நிகழ்த்தினார். பின்னர் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் ஏபிஜே அப்துல்கலாம் விருதை இஸ்ரோ திட்ட இயக்குநர் விஞ்ஞானி வளர்மதிக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இந்த விருது 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழைக் கொண்டது. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலனுக்கு பாடுபட்டமைக்காக விஞ்ஞானி வளர்மதிக்கு விருது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு ஜோதி மணிக்கு கல்பனா சாவ்லா விருதை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். சென்னை மாநகராட்சி அம்மா உணவகத்திற்கு நல்ஆளுமை விருதையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். சிறந்த மாநகராட்சிக்கான விருது மதுரைக்கும் சிறந்த நகராட்சிக்கான விருது புதுக்கோட்டைக்கும் வழங்கப்பட்டது. இதேபோல் சிறந்த சேவை, மாற்று திறனாளிகளுக்கான சேவை, மகளிர் தொண்டு நிறுவனம், சிறந்த மாவட்ட வங்கி உள்ளிட்ட பல்வேறு வருதுகளை ஜெயலலிதா வழங்கினார்.