மீனவர்களை மீட்கக் கோரி பூத்துறையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் பேரணி நடத்திய சக மீனவர்கள்
குமரி: கரை திரும்பாத மீனவர்களை மீட்டு வருமாறு மத்திய, மாநில அரசுகளை வலியறுத்தி பூத்துறை மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.
ஓகி புயலால் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகியுள்ளனர். கடலுக்கு சென்ற அவர்கள் வீடு திரும்பாததால் அவர்களின் குடும்பத்தார் கவலையும், கண்ணீருமாக உள்ளனர்.
கேரள அரசை போன்று துரிதமாக செயல்பட்டு மீனவர்களை காப்பாற்றக் கோரி குமரி மாவட்ட மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலில் இறங்கி போராடுவது, ரயில் மறியல், தர்ணா என்று தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களை காப்பாற்றுங்கள் என்று சமூக வலைதளங்களிலும் தகவல் பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கரை திரும்பாத மீனவர்களை காப்பாற்றுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி குமரி மாவட்டம் பூத்துறையை சேர்ந்த மீனவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க பேரணி நடத்தினர். அந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.