அண்ணா காலத்து திமுக தளபதி 'அண்ணாச்சி' ரத்தினவேல் பாண்டியன்- சட்டசபை தேர்தலிலும் போட்டி!
திமுகவின் நெல்லை மாவட்ட செயலாளராக, சேரன்மாதேவி தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவர்தான் மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன்.
Recommended Video

சென்னை: 1960களில் கொள்கை உரத்தோடு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர் மறைந்த உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன்.
திமுகவின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன். இந்தி திணிப்புக்கு எதிராக மொழிப்போர் நடைபெற்ற காலத்தில் திமுகவின் நெல்லை மாவட்ட செயலாளராக இருந்தார் ரத்தினவேல் பாண்டியன்.
1966 வத்தலகுண்டு திமுக மாநில மாநாட்டுக்கு தலைமை வகித்து அண்ணாவின் பாராட்டுதலைப் பெற்றவர். அந்த கால கட்டத்தில்தான் கலிங்கப்பட்டி கிளைக் கழக வட்டப் பிரதிநிதியாக இருந்தவர் இன்றைய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

வைகோவும் அண்ணாச்சியும்
வைகோவை அரசியல் ரீதியாகவும் வழக்கறிஞர் தொழிலும் வார்த்தெடுத்த 'காட்பாதர்' அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன்தான். திமுக மாவட்ட செயலாளர் தேர்தலில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட தூத்துக்குடி சிவசாமியை எதிரியாகக் கருதாமல் அவருக்கும் முன்னுரிமை கொடுத்து கட்டுப்பாட்டு அரசியலை வளர்த்தெடுத்தவர் அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன்.

குடும்பமாக கருதியவர்
திமுக பொதுக்கூட்டங்களில் வைகோவுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கிவிட்டு தாம் குறைந்த நேரம் மட்டுமே பேசுவாராம் ரத்தினவேல் பாண்டியன். திமுகவின் ஒவ்வொரு தொண்டனையும் நிர்வாகியையும் குடும்ப உறுப்பினராக கருதி எந்த வித மாச்சரியத்துக்கும் இடம் தராமல் அரவணைத்துச் சென்றவராகவும் திகழ்ந்திருக்கிறார்.

200 வாக்குகளில் தோல்வி
1971 சட்டசபை தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் ரத்தினவேல் பாண்டியன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுயராஜ்ய கட்சியின் சிவபிரகாசம் போட்டியிட்டார். இத்தேர்தலில் வெறும் 200 வாக்குகளில் ரத்தினவேல் பாண்டியன் தோல்வியைத் தழுவினார். இதில் ரத்தினவேல் பாண்டியன் வென்றிருந்தால் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இடம்கிடைத்திருக்கக் கூடும். அவரது அரசியல் பயணம் தொடர்ந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.

அரசு வழக்கறிஞர் டூ உச்சநீதிமன்றம்
1971ல் தமிழக அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் ரத்தினவேல் பாண்டியன். அதன்பின்னர் முழுமையாக நீதித்துறையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதியாக திராவிட இயக்க சிந்தனையோடு பணியாற்றியவர் ரத்தினவேல் பாண்டியன்.

வெங்கடாசலையாவுக்காக தியாகம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பும் ரத்தினவேல் பாண்டியனுக்கு கிடைத்தது. ஆனால் தம்மை விட சில நாட்கள் சீனியரான வெங்கடாசலையாவுக்கு அப்பதவியை தர வேண்டும் என எழுதிக் கொடுத்தார் ரத்தினவேல் பாண்டியன். மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை சட்டமாக்கியதும் ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான்.

தீரமுடன் காஷ்மீரில்..
2000-ம் ஆண்டு காஷ்மீரில் 35 சீக்கியர்கள் கொல்லப்பட்ட போது கிளர்ச்சி வெடித்தது. இந்த கிளர்ச்சியில் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இச்சம்பவம் குறித்து மத்திய அரசு அமைத்த ஒருநபர் விசாரணை கமிஷன் தலைவராக இருந்தவர் ரத்தினவேல் பாண்டியன்.

5-வது ஊதிய கமிஷன் தலைவர்
மத்திய அரசின் 5-வது ஊதிய கமிஷன் தலைவராக பணிபுரிந்து ஊதிய முரண்களைக் களைவதற்கும் வகை செய்தார். தென்மாவட்ட ஜாதி மோதல்களின் போது திமுக ஆட்சியில் ரத்தினவேல் பாண்டியன் கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போது தென்மாவட்ட பொருளாதார மேம்பாட்டுக்கான பரிந்துரைகளை ரத்தினவேல் பாண்டியன் வழங்கினார்.












Click it and Unblock the Notifications