மெட்ரோ ரயில்ல போறீங்களா... அப்படின்னா நீங்க இலவச சைக்கிள் சேவையை அனுபவிக்கலாம்!
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு ‘இலவச சைக்கிள் சேவை திட்டம்’ அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது
சென்னை: மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் சேவை திட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகள் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று வர இந்த இலவச சைக்கிள் சேவை திட்டம் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகள் அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல ஆட்டோ மற்றும் பஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை மேம்படுத்தும் பணியில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இலவச சைக்கிள் சேவை
இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் ரயில் நிலையங்களில் இலவச சைக்கிள் சேவையை கொண்டுவர மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக கோயம்பேடு பஸ் நிலையம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், பரங்கிமலை, ஷெனாய்நகர் மற்றும் நேரு பூங்கா ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் தலா 10 சைக்கிள்கள் வீதம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதி சைக்கிள் கிளப்
தேவையை கருதி மேலும் சில ரயில் நிலையங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. ரயில் நிலையங்களுக்கு தேவைப்படும் சைக்கிள்களை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஆதி சைக்கிள் கிளப் வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்எம்எஸில் பதிவு செய்யனும்
சைக்கிள் தேவைப்படும் மெட்ரோ ரயில் பயணிகள், தங்களை பற்றிய தகவல்களை குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி அதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதனை பரிசீலித்துவிட்டு, பயணியின் செல்போனுக்கு பதில் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என தெரிகிறது.

செல்போன் எண் அறிவிக்கப்படும்
அதனை ரயில் நிலையங்களில் உள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்தில் காண்பித்து சைக்கிள்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டிய செல்போன் எண் முறையாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ரயில் நிலையத்தில் வேண்டுமானாலும்..
குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் சைக்கிள்களை எடுத்து செல்லும் பயணிகள் அதே ரயில் நிலையத்தில்தான் சைக்கிள்களை ஒப்படைக்க வேண்டும் என்பதில்லை. பயணிகளுக்கு சைக்கிள் வழங்கும் 7 ரயில் நிலையங்களில் ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் சைக்கிள்களை ஒப்படைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏமாற்ற முடியாது
சைக்கிள்களை எடுத்து செல்லும் பயணிகள் அதனை திரும்ப ஒப்படைக்காமல் ஏமாற்ற முடியாது. ஏனெனில் சைக்கிள் கேட்டு எஸ்எம்எஸ் அனுப்பும் நபரின் அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு விடும். எனவே பயணிகள் சைக்கிளை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றினால் அவர்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications